Monday, 26 March 2012

இடிந்த கரை.. இடியாத நம்பிக்கை…

இடிந்த கரை.. இடியாத நம்பிக்கை…


இதை நான் எழுதும் கடைசி ஓ பக்கமாக அறிவித்துவிடலாமா என்ற மனநிலையில்தான் எழுத ஆரம்பிக்கிறேன். என்ன எழுதி என்ன பயன் என்ற அலுப்பே காரணம். அலுப்புக்குக் காரணம் கூடங்குளம்.
பிப்ரவரி கடைசி வாரத்தில் இதே ஓ பக்கங்களில் நான் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்திலிருந்து சில பகுதிகள் இதோ :
“உங்கள் முன்னால் தெளிவாக இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழி அணு உலைகளை எதிர்க்கும் இயக்கங்களின் விஞ்ஞானிகள் குழுவை சந்தியுங்கள். அணு உலையை ஆதரிக்கும் அரசு விஞ்ஞானிகள் குழுவை அவர்களுடன் பயப்படாமல் உரையாடச் சொல்லுங்கள். சங்கரன்கோவில் தேர்தலுக்கு அனுப்பும் 31 அமைச்சர்களை இடிந்தகரைக்கு அனுப்பி மக்களிடம் பேசச் சொல்லுங்கள். சிறுமியாக நடிக்கப்போன காலத்திலிருந்து செட்டில் கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். நூற்றுக்கணக்கில் செருப்புகளை வைத்திருந்தீர்கள் என்ற அவதூறுப் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் ஆயிரக்கணக்கில் புத்தகங்களை உடைய நூலகத்தை வீட்டில் வைத்திருந்ததை மறைக்கப் பார்த்தார்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இரு தரப்பு நூல்களையும் வாசியுங்கள். ந்மக்கு ஒருபோதும் அணு உலை வேண்டாம் என்ற முடிவுக்கு நிச்சயம் வருவீர்கள். கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல தமிழகமும் அணு உலை மறுப்பு மாநிலமாக உங்களால அறிவிக்கப்படட்டும். தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு உங்களைப் போற்றுவார்கள். ஒரு பென்னி குவிக்கை நினைவு கூர்வது போல தமிழகத்தில் செர்னோபில்லும் புகொஷிமாவும் வராமல் தடுத்த பெருமைக்குரியவராக நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள்.
இரண்டாவது வழியை மேற்கொண்டாலும் வரலாற்றில் இடம் உண்டு. சீனிவாசன் குழு அறிக்கையை ஏற்று அணு உலையை அனுமதியுங்கள். போராடும் மக்களை போலீஸ், ராணுவ உதவியுடன் ஒடுக்குங்கள். ஓரிரு துப்பாக்க்கிச் சூடுகளும் சில நூறு உயிர் சேதமும் ஏற்பட்டாலும் பொருட்படுத்தாதீர்கள். மத்திய அரசின் அன்புக்கும் ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச், முதலாளிகளின் அன்புக்கும் உரியவராவீர்கள். தமிழக மக்களின் துரோகி என்ற பெயருடன் வரலாற்றில் இடம் இருக்கத்தான் செய்யும். ஏற்கனவே அந்த இடம் உங்கள் அரசியல் பங்காளி கலைஞர் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. என்ன செய்ய, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் இருவருக்கும் வரலாற்றின் ஒரே வரிசையில்தான் இடம் கிடைக்கும். அவர்தான் கேரளம் ஏற்க மறுத்த கூடங்குளம் அணு உலையை முதலில் தானும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு பிறகு வரவேற்று பல்டி அடித்த துரோகத்துக்குரியவர். இப்போதும் மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால் அணு உலையை எங்கள் மீதும், தமிழர்களின் துரோகி பட்டத்தை உங்கள் மீதும் திணித்து விடாதீர்கள். முதல் வழி உங்களை நிஜமான தமிழக அன்னையாக்கும்.”
ஜெயலலிதா புரட்சித் தலைவி அல்ல, மக்கள் விரோதத்தலைவி என்பதை நிரூபித்துவிட்டார். இந்தக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் புதன்கிழமை மதிய நேரத்தில் இடிந்தகரை கிராமத்தில் ஆயிரக்கனக்கான மக்கள் மீது ஜெயலலிதாவின் அரசும் மன்மோகன் அரசும் கூட்டாக ஒரு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ராஜ்பக்‌ஷே இலங்கையில் பின்பற்றிய எல்லா உத்திகளையும் ஜெ-மன்மோகன் கூட்டணி இங்கே பின்பற்றிக் கொண்டிருக்கிறது.போராடும் மக்களுக்கு மின்சாரம், தண்ணீர், பால், உணவு, காய்கறிகள் எதுவும் செல்லமுடியாமல் வழிகளை அடைத்து அவர்கள் மீது ஒரு முற்றுகை யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்தக் கட்டுரை அச்சாகி உங்கள் கைக்கு வரும் நேரத்துக்குள் இடிந்தகரையில் தடியடியோ, துப்பாக்கிச்சூடோ கூட நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அங்கே என்ன வன்முறை நடந்தாலும் அதை அரசுகள்தான் செய்திருக்குமே தவிர மக்கள் அல்ல.
சுமார் 200 நாட்களுக்கு மேலாக ஐயாயிரம முதல் நாற்பதாயிரம் வரை மக்கள் தினசரி கலந்துகொண்டு நடத்தி வந்த அறவழிப் போராட்டத்தில் துளி கூட வன்முறை கிடையாது. இந்தியாவில் 1947க்குப் பின் இது போல ஒரு அற்புதம் நிகழ்ந்ததே இல்லை. அணு உலையை பலமாக ஆதரிக்கும் தி.மு.கவும் அ.தி.மு.கவும்தான் கடந்த 45 வருடங்களாக தமிழகத்தை ஆள்பவர்கள். அவர்களுடைய தலைவர்களை கைது செய்தால் அடுத்த நொடியில் தெருவில் இறங்கி பஸ்களை உடைப்பது, எரிப்பது, கடைகளை சூறையாடுவது என்பதுதான் அவர்களுடைய அரசியல் கலாசாரம். ஒரு சிறு கல்லைக் கூட எடுத்து வீசாமல், 200 நாட்களாக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வந்த கூடங்குளம் இடிந்தகரை மக்கள் மீது ஜெ-மன்மோகன் அரசுகள் பயங்கரவாதிகள் மீது போர் தொடுப்பது போல போர் தொடுத்துள்ளன.
ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். மார்ச் 18 அன்று சங்கரன்கோவில் வாக்குப்பதிவு முடிந்ததும் பெரும் போலீஸ் படை, துணை ராணுவப் படை எல்லாம் கூடங்குளத்தை சூழ்ந்துகொள்கின்றன. கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 40 ஆயிரம் மக்கள் நினைத்திருந்தால் மார்ச் 15ந் தேதியே அணு உலைக்குள் நுழைந்து அதை உடைத்து நொறுக்கியிருக்க முடியாதா? அற வழியில் போராடும் மக்களுக்கு அப்படி ஒரு சிந்தனையே வரவில்லை. இத்தனை பேர் கூடி அமைதியாக உண்ணாவிரதம் இருக்கிறோம். நாம் சொல்வதை அரசு செவி கொடுத்துக் கேட்கும் என்று நம்பினார்கள்.
அவர்கள் கேட்டது என்ன ?
உலை பாதுகாப்பானது அல்ல என்று எங்கள் சார்பில் சொல்லும் விஞ்ஞானிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். கடைசி வரை மக்களின் விஞ்ஞானிகளை சந்திக்க அரசுகளின் விஞ்ஞானிகள் முன்வரவே இல்லை.
விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தருவது பற்றி, உலையை விற்ற ரஷ்யாவுடன் போட்ட ஒப்பந்தத்தை வெளியிடுங்கள் என்று கேட்டார்கள். அரசு கடைசி வரை வெளியிடவே இல்லை.
மக்களின் கோரிக்கையை அரசு கேட்கும் என்று நம்பி நம்பி போராட்டத்தை அறவழியில் கடைசி நொடி வரையில் மக்கள் தொடர்ந்தார்கள். ஆனால் மக்கள் சொல்வதைக் கேட்கவே போவதில்லை என்பதில் இரு அரசுகளும் ஆரம்பத்திலிருந்தே பிடிவாதமாக இருந்தன. மன்மோகன் அரசு அதை பகிரங்கமாகவே நாராயணசாமி மூலம் சொல்லிக் கொண்டிருந்தது. ஜெயலலிதாவின் அரசு நடித்தே ஏமாற்றியது.
ஆனால் ஜெயலலிதாவின் அரசு இதைத்தான் செய்யும் என்பதற்கு எல்லா அறிகுறிகளும் இருந்தன. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் போராடுவோருக்கு சாதகம் போன்ற ஒரு தீர்மானத்தைப் போட்டு முதல் சீனை நடித்தது. ஆனால் அதில் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லப்பட்டது. அச்சம் போகாவிட்டால் அணு உலை வேண்டாம் என்று சொல்லபப்டவே இல்லை. அடுத்து மத்திய அரசு நியமித்த குழு முழுக்க முழுக்க அணு விஞ்ஞானிகளின் லாபியாகவே இருந்தது. அது அம்பலமானதும அதை சமாளிக்க ஜெயலலிதா அரசு நியமித்த நால்வர் குழு மிகத் தெளிவாக ஜெ கடைசியில் என்ன செய்யப்போகிறார் என்பதைக் காட்டிவிட்டது. எம்.ஆர் சீனிவாசன் அதில் இடம் பெறுவதை போராட்டக்குழுவினர் ஆட்சேபித்ததை ஜெ கண்டுகொள்ளவே இல்லை. சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு எழுத்தாளர்கள் தன்னை சந்தித்து அணு உலை எதிர்ப்பை விளக்க நேரம் கேட்டதற்கு ஒரு மரியாதைக்குக் கூட அவர் பதில் கடிதம் போடவில்லை.
நடுவில் சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தேதி வராமல் இருந்திருந்தால், ஜெ அணு உலை திறப்பையும் மக்களுக்கு எதிரான யுத்தத்தையும் ஒரு மாதம் முன்பே செய்திருப்பார். இப்போது நாம் செய்யக் கூடிய ஆராய்ச்சியெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஜெவின் சொந்த புத்தியிலேயே அணு உலை நல்லது என்று படுவதால் இப்படி செய்கிறாரா அல்லது அதிகாரிகள் சொல்படி ஆடுகிறாரா அல்லது மத்திய அரசு சொத்துக் குவிப்பு, இன்னும் வெளிவராத இதர ஊழல் வழக்குகளை சி.பி.ஐயைக் காட்டி பக்குவமாக மிரட்டல் செய்திகள் அனுப்புவதால், அதன் சொல்படி கேட்கிறாரா என்றெல்லாம் ஆராயலாம். எல்லாம் வெற்று ஆராய்ச்சிதான்.
அசல் யதார்த்தம் என்னவென்றால் கூடங்குளத்தில் போராடிய ஆயிரக்கணக்கான மக்களை மன்மோகன் அரசு பகிரங்கமாகவும் ஜெயலலிதா அரசு நயவஞ்சகமாகவும் ஏமாற்றியுள்ளன என்பது மட்டும்தான். இதை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் அப்துல் கலாம், டாக்டர் சாந்தா, இனியன், சீனிவாசன், பாலு என்று ஒரு பக்கம் மெத்தப் படித்த மேதாவிகள் பட்டியலும் இன்னொரு பக்கம் நரி கையில் நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு நாலு ஆடு கேட்கும் நிலையிலான போலீஸ் அதிகாரிகள் பட்டியலும் நீளமானவை. படித்தவன் சூதும் வாதும் பண்ணினால், படிக்காதவன் போவான் போவான் அய்யோவென்று போவான் என்றுதான் இதைச் சொல்லவேண்டும்.
உண்மையில் ஏமாந்திருப்பது மக்கள் மட்டுமல்ல ஜெ, மன்மோகன் வகையறாக்களும்தான். எல்லாரையும் ஏமாற்றியிருப்பது அணு சக்தி துறையும் உலக அணு உலை வியாபாரிகளும்தான். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சரியாக ஒரு வருடம் கழித்து ஏப்ரல் 1, 2013ல் முட்டாள்கள் தினத்தன்று, கூடங்குளம் உலைகளிலிருந்து எத்தனை ஆயிரம் மெகாவாட் பொங்கி பிரவாகித்து தமிழகத்தில் பாலும் தேனும் ஓடச் செய்தன என்ற கணக்கைப் பார்க்கும்போது எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது புரியும். இந்தியாவில் ஒரு செர்னோபில்லோ புகோஷிமாவோ நடந்தால்தான் அறிவு வரும் என்ற மயக்கத்தில் இருப்பவர்களை யாரும் திருத்தமுடியாது. அப்படி ஒரு கொடுமை என் ஆயுட்காலத்துக்குள் நடக்கவேண்டாமென்று மட்டுமே, இல்லாத கடவுளை நான் பிரார்த்திக்க வேண்டும்.
இந்தக் கணத்தில் என்னுடைய மிகப் பெரிய வேதனையெல்லாம் கூடங்குளம் மக்கள், காந்தி போன்ற ஒரு தலைமை இல்லாமலே நடத்திய அற்புதமான காந்திய போராட்டத்தை மன்மோகனும் ஜெயலலிதாவும் அரசு இயந்திரத்தைக் கொண்டு வன்முறையால் நசுக்கிக் கொண்டிருப்பதைப் பற்றித்தான். வாஜ்பாயியும் கருணாநிதியும் இருந்தாலும் இதையேதான் செய்வார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தோழர்கள் (!) ஜி.ஆரும் தா.பாவும் கூட ஆட்சியில் இருந்தால் (நல்ல வேளை அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் அவர்கள் ஆட்சிக்கு வரும் வாய்ப்பே இல்லை) இதையேதான் செய்வார்கள் என்று கணிக்கவேண்டிய சூழல் இருப்பதைப் பார்க்கும்போது என் வேதனை பல மடங்கு அதிகமாகிறது.
உலையை அனுமதிப்பது என்ற முடிவை எடுத்த ஜெயலலிதா ஏன் திரும்பவும் தன்னை சந்திக்க உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினரை அழைத்திருக்கக்கூடாது. ஏன் அவர்களுடைய விஞ்ஞானிகளையும் அழைத்திருக்கக்க்கூடாது ? ஏன் அவர்களிடம் தனக்கு உலை திறப்பதைத் தவிர வேறு தீர்வு இல்லை என்பதைப் பேசியிருக்கக்கூடாது ? ஓட்டு கேட்க மக்களை சந்திக்க ஓடும் ஜெவும், மகளுக்காக வீல் சேரில் டெல்ல்க்கே செல்லும் கருணாநிதியும் ஏன் அமைதியாக் கூடி உட்கார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான கூடங்குளம் மக்களை ஒரு முறை கூட போய் பார்க்க முன்வரவில்லை ?
இதுவே கூடங்குளம் மக்கள் ஜார்கண்ட் மாவோயிஸ்ட்டுகள் போல ஆயுதந்தாங்கி போராடியிருந்தால், காவல் துறை உயர் அதிகாரிகள் வள்ளியூர் வரை கூட போயிருக்க மாட்டார்களே ? களத்தில் கடைநிலை சிப்பாய்களை நிறுத்திவிட்டு சென்னை ஏ.சி.அறையிருந்தல்லவா உத்தரவிட்டுக் கொண்டிருப்பார்கள் ? இடிந்தகரைக்கு மின்சாரத்தையும் தண்ணீரையும் உணவையும் அவர்கள் நிறுத்தியிருக்க முடியுமா ? ஜெயலலிதாவும் மன்மோகனும் சிதம்பரமும் அவர்களை பேச்சு வார்த்தைக்கு வரும்படி கெஞ்சியிருக்க மாட்டார்களா?
காந்திய அறவழியில் போராடும் மக்களிடம் தானும் அறவழியில் பேசுவதே சரியென்று ஏன் அரசுகளுக்கு உறைப்பதே இல்லை ? அமைதியாக வாழவும் அமைதியாக போராடவும் விரும்பும் மக்களை ஆயுதக் கலாசாரத்தை நோக்கி தள்ளுவது அரசுதானே? அதுதானா அரசின் உண்மை விருப்பம் ? காந்தியைக் கொல்வதுதான் அரசின் நிரந்தர திட்டமா? காந்தி இந்தியாவில் ஒரு முறை மட்டும் கொல்லப்பட்டவர் அல்ல. திரும்பத் திரும்பக் கொல்லப்படுகிறார். இந்த முறை கோட்சேவின் இடத்தில் மன்மோகனும் ஜெயலலிதாவும்.
அணு உலைகள் ஆபத்தானவை. அவற்றால் எந்தப் பெரும் பயனும் வளர்ச்சியும் நடப்பதில்லை என்ற உண்மையை கூடங்குளத்தின் பாமர மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். படித்தவர்களின் சூது அவர்களை இப்போது முறியடித்துவிட்டது. தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தருமம் மறுபடியும் வெல்லக் காண்போம். அந்த நம்பிக்கையில்தான் நான் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் கூடங்குளத்தில் மன்மோகன் ஜெ நடத்தும் யுத்தம் இந்த ஜனநாயகத்தின் மீது எனக்கு 35 வருடங்களாக இருந்து வந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டது. இனி எல்லா தேர்தலிலும் என் ஓட்டு 49ஓதான். இன்னமும் எனக்கு இந்த நாட்டு ஜனநாயகத்தின் மீது கொஞ்சம் நம்பிக்கை எஞ்சியிருப்பதற்கு ஒரே காரணம், இதை எழுதும் இந்த நொடியிலும், துளி கூட வன்முறை இல்லாமல், அறவழியில் நம்பிக்கையுடன் இடிந்த கரையில் கூடியிருக்கும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குறிப்பாக மீனவர்களும்தான். அவர்கள் என்றோ ஒரு நாள் அதிகரிப்பார்கள், வெல்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த வாரத்துடன் எழுதுவதை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்கிறேன்.
கல்கி 23.3.2012

Monday, 28 November 2011

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு மிக மிகச் சாதாரணம்!


திருச்சி
ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு மிக மிகச் சாதாரணம்

First Published : 27 Nov 2011 01:25:26 PM IST


திருச்சி, நவ. 26: அணு உலைகளுடன் ஒப்பிடும்போது ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டு மிக மிகச் சாதாரணம் என்றார் எழுத்தாளர் ஞாநி.  திருச்சி களம் அமைப்பின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் "அணு அரசியல்' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:  "கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை நடத்துவோர் இத்தனை நாள் எங்கே போனார்கள் என்கிறார்கள். 1987-90-களில் கடுமையான போராட்டம் நடைபெற்றது.   1990-களில் சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு, 10 ஆண்டுகள் கூடங்குளம் திட்டம் கிடப்பில் போடப்பட்டு, 2001-ல் புதிய ஒப்பந்தம் போடப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, போராட்டமும் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.   சிந்திக்கக்கூடிய மக்கள் கூடங்குளம் அணு உலையை மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து அணு உலைகளையும் மூட வேண்டும் எனக் கேட்க வேண்டும். "செர்னோபில்' விபத்து ஒரு கண்டத்தையே பாதித்தது என்ற வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.  கூடங்குளம் அணு உலை வந்தால் மின்சாரத் தட்டுப்பாடு போய்விடும் என்பது வடிகட்டின பொய். 1962 முதல் இவர்கள் கூறிவந்த அளவுக்கு இதுவரையிலும் மின்சாரம் கிடைக்கவில்லை. கொடுத்த இலக்கில் ஒரு சதத்தைக்கூட அணு உலைகள் நிறைவு செய்யவில்லை. 1999-ல் மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அதிகாரியே இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.  இதுவரை அணுசக்தி குறித்த மக்களின் எந்தக் கேள்விக்கும் சம்பந்தப்பட்ட துறை பதிலளித்ததே இல்லை. இதுதொடர்பாக பேசுவதே குற்றம் என்றுதான் சொல்லப்பட்டு வந்தது. முதல்முறையாக கூடங்குளத்தில் மக்களின் அசராத போராட்டத்துக்குப் பிறகு பதில் என்ற பெயரில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.  அணு உலையை இயக்க ஒரு நாளைக்கு 6 லட்சம் லிட்டர் நல்ல தண்ணீர் வேண்டும். பேச்சிப்பாறை அணையிலிருந்து எடுக்க முடியுமா? இந்த அணை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், பாதிக்கும் அதிகம் வண்டல் மண்தான் நிரம்பியிருக்கிறது. போதுமான தண்ணீர் கிடைக்காவிட்டாலும், உலையைக் குளிர்விக்க முடியாமல் வெடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.  ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டை பேரழிவாகக் கருதுகிறோம். தற்போது அமைக்கப்படும் அணு உலைகளோடு ஒப்பிடும்போது, அங்கு போடப்பட்ட அணுகுண்டு மிக மிகச் சாதாரணம்.  அணுசக்தியால் ஏற்படும் விபத்துகளுக்கு அரசு நிறுவனம் உள்பட எந்தக் காப்பீட்டு நிறுவனங்களும் காப்பீடு- இழப்பீடு வழங்குவதில்லை. கூர்ந்து கவனித்தால் இது புரியும்.  இப்போது அரசு இந்த அணுஉலைகளை நடத்தி, ஒரு கட்டத்தில் தனியாருக்கு அளிப்பதுதான் திட்டம். இப்போது மூடிவிட்டால் தனியாருக்குக் கொடுக்க முடியாது என்பதே மத்திய அரசின் கவலை.  குறைந்த கட்டணத்தில் மின்சாரம் கிடைக்கும் என்பதும் தவறான கருத்து. ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 16 முதல் ரூ. 20 வரைக்கும் விலையாக நிர்ணயம் செய்யப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  ஆண்டுக்கு 4 மாதங்கள் மட்டுமே வெயிலைப் பார்க்கும் ஜெர்மன் நாட்டின் மொத்த மின்சக்தியில் 20 சதம் சூரிய ஒளியில் இருந்துதான் மின்சாரம் எடுக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 300 நாள்கள் மேகங்கள் இல்லாத நாள்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.  தாவரங்களைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் சிறிய சிறிய ஏற்பாடுகளை கிராமங்களில் செயல்படுத்தலாம். இதற்கான முன்னுதாரணங்கள் நிறைய இருக்கின்றன. மின்சாரத்துக்காக குண்டு சுமக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் ஞாநி.  கூட்டத்துக்கு, பா. சந்திரகாந்த் தலைமை வகித்தார். கவிஞர் நந்தலாலா அறிமுகவுரை நிகழ்த்தினார். இரா. சுவாமிநாதன் வரவேற்றார்.   சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் எழுத்தாளர் மெய். சேது ராமலிங்கம் எழுதிய "பேரழிவுக்கான அணு சக்தி ஒப்பந்தங்கள்' என்ற நூலை ஞாநி வெளியிட, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே. சந்திரசேகர், அமைப்பாளர் அ. கிரகோரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தமிழகத்தைத் தாக்கவிருக்கும் வஜோண்ட் பேரழிவு!

தமிழகத்தைத் தாக்கவிருக்கும் வஜோண்ட் பேரழிவு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 10
குறைந்தஅதி சிறந்த 
திருமதி சோனியா காந்தி அவர்கள் பிறந்த ஊரான (இத்தாலியின்) லூசியானா நகருக்கு வட கிழக்கே 78 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள லாங்கேரோன் (Longarone) கிராமத்தில் 1959 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட வஜோண்ட் அணைக்கட்டின் (Vajont Dam) வரலாற்றை நினைவு கூற வேண்டிய கட்டாயத்திற்கு இன்று நாம் தள்ளப்பட்டு உள்ளோம். வஜோண்ட் அணைக்கட்டு நிர்வாகமானது அணைக்கட்டு அமைவிடத்தின் நிலவியல் மற்றும் பொறியியல் உண்மைகளை உதாசீனப்படுத்தியது. அதன் அசிரத்தைப் போக்கை இத்தாலி அரசு கண்டிக்கவில்லை; மாறாக ஊக்குவித்தது. இந்த கூட்டு நடவடிக்கைகளால் ஏற்பட்ட பேரழிவின் நினைவுச் சின்னமே வஜோண்ட் அணைத் திட்டம். கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பணிகள் இன்று வஜோண்ட் அணையின் வரலாற்றை நினைவுபடுத்துவதாக உள்ளன. 
மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் 70 கிலோமீட்டர் மற்றும் 35 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரண்டு  உடைந்து சரியும் தன்மையைக் கொண்ட வண்டல் குவியல்கள் (slumps) உள்ளன. கிழக்குக் குமரி மற்றும் கொழும்பு வண்டல் குவியல்கள் என்று அவற்றிற்கு நிலவியல் அறிஞர்கள் பெயரிட்டுள்ளார்கள். 1982 ஆம் ஆண்டில் வில்லியம் வெஸ்டால் மற்றும் லௌரீ என்ற இரு ஆய்வாளர்கள் அவற்றை முதன் முதலில் கண்டறிந்தார்கள். அவற்றின் கட்டமைப்பை விரிவான ஆய்வுக்குட்படுத்தி அறிவியல் உலகத்திடம் பகிர்ந்துகொண்டார்கள். 1994 ஆம் ஆண்டில் இந்த வண்டல் குவியல்களின் அடிப்பகுதியில் எரிமலை முகவாய்கள் உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நில அதிர்வுகளின்போதும், புயல் போன்ற நிகழ்வுகளின் போதும் வண்டல் குவியல்கள் நிலைகுலைந்து போகும் தன்மை பெற்றவை. நிலைகுலைந்த வண்டல் குவியல்களால் கடலுக்கடியில் ஏற்படும் நிலச்சரிவுகள் மெகா சுனாமிகளை (100 மீட்டருக்கும் கூடுதலான உயரம் கொண்ட சுனாமி அலைகளை) உருவாக்க வல்லவை என்பது அறிவியல் உலகம் அறிந்த உண்மை. இந்த வண்டல் குவியல்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து வெறும் 90 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளன.
vajont_dam_620
வாஜோண்ட் அணைக்கட்டின் அமைவிடத்தின்  நிலவியல் உண்மைகளை உதாசீனம் செய்த SADE நிறுவனத்தைப் போலவே இந்திய அணுசக்திக் கழகமும் இந்த வண்டல் குவியல்களினால் ஏற்பட வாய்ப்புள்ள பேரிழிவு நிகழ்வுக்கான சாத்தியப்பாட்டை ஆய்வுக்குட்படுத்த இன்றளவும் மறுத்து வருகிறது.  இந்த சூழ்நிலையில், வஜோண்ட் அணைக்கட்டின் வரலாற்றைப் படிக்கும்போது எப்படிப்பட்ட நிலவியல் பேரிடரையும், சமூக விளைவுகளையும் நாம் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கிறோம் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.
................
வஜோண்ட் அணைக்கட்டானது உலகத்தின் மிக உயர்ந்த அணைக்கட்டுகளில் ஒன்றாகும். அதன் உயரம் 262 மீட்டர். வடக்கு இத்தாலியில் உள்ள மாண்டெ டாக் (Monte Toc) மலை அடிவாரத்தில் இந்த அணை எழுப்பப்பட்டது.
1925-28 ஆம் ஆண்டுகளில் முசோலினி அரசின் நிதி அமைச்சராக இருந்த குயுசெப் வால்ப்பி (Gueseppe Volpi)-க்கு சொந்தமான ஆட்ரியாடிக் மின்சாரக் குழுமத்தினால் (Societa Adriatica di Elettricita – SADE) கட்டப்பட்டதே இந்த அணை. நாட்டின் முன்னேற்றத்திற்காக என்ற பெயரில் கட்டப்பட்ட்ட இந்த அணையை அந்தப்பகுதியின் அனைத்து கிராம-நகர மக்கள் கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. 1957 ஆம் ஆண்டு அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது, அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து நிலவியல் ஆய்வுகளையும் முழுமையாக செய்தாகிவிட்டதாக SADE அறிவித்தது. எதிர்பாராத விதமாக, 1959 ஆம் ஆண்டில் மாண்டெ டாக் மலையை ஒட்டி சாலைகளை அமைத்தபோது நிலமானது பல இடங்களில் பிளந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனை ஒட்டி எழுந்த மக்கள் போராட்டங்களின் விளைவாக புதிய நிலவியல் ஆய்வுகளை மேற்கொள்ள SADE நிர்ப்பந்திக்கப்பட்டது. புதிய ஆய்வுகள் பல அதிர்ச்சிமிக்க முடிவுகளை முன்வைத்தன.
vajont_dam_tragedyஅணையின் தென்புற நீர்ப்பிடிப்புப் பகுதியை ஒட்டியிருக்கும் மாண்டெ டாக் மலைப்பகுதியானது உறுதியற்ற நிலவியல் தன்மையைக் கொண்டிருக்கிறது என்றும், அணையில் நீரை நிரப்பினால் இந்த மலைப்பகுதி முழுவதுமே நிலச்சரிவுக்குள்ளாகும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்தனர். அவர்களது எச்சரிக்கையை SADE நிறுவனம் கண்டு கொள்ளவில்லை. 1959 ஆம் ஆண்டு அணையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தன. 1960 ஆம் ஆண்டில் அணையை நிரப்புவதற்கான அனுமதியை இத்தாலி அரசு வழங்கியது. அணை நிரப்பப்பட்ட சில மாதங்களிலேயே சிறிய அளவிலான நில அதிர்வுகளும், நிலச்சரிவுகளும் உருவாகத் தொடங்கின. இந்த செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்களின் மீது “சமூக ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்வதாக” இத்தாலி அரசு குற்றம் சாட்டியது; அவர்கள் மீது வழக்கும் தொடர்ந்தது.
அந்த ஆண்டு இறுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டு, நிலச்சரிவின் இடிபாடுகள் அணைக்குள் வீழ்ந்தன. இதன் பிறகு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க முடிவு செய்த SADE, கூடுதலாக நிலச்சரிவில் இருந்து அணையைக் காப்பாற்ற மலையை ஒட்டி தடுப்புச்சுவர் ஒன்றைக் கட்ட முடிவு செய்தது. 1961 ஆம் ஆண்டின் இறுதியில் தடுப்புச்சுவர் கட்டி முடிக்கப்பட்டது. இதன் பிறகு அணையில் மீண்டும் நீர் நிரப்பப்பட்டது. 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அணையின் முக்கால் பாகம் நிரப்பப்பட்டபோது ஐந்து பூகம்பங்கள் ஏற்பட்டன. மக்கள் மீண்டும் போராடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களது எதிர்ப்பை SADE கண்டுகொள்ளவில்லை. மக்களின் எதிர்ப்பையும் மீறி அணையை முழுஅளவில் நிரப்பிக்கொள்ள இத்தாலி அரசின் அனுமதியைப் பெற்றது.
தண்ணீரை முழு அளவில் தேக்கினால் ஏற்பட வாய்ப்புள்ள நிலச்சரிவு குறித்து SADE நிறுவனத்தின் பொறியியலாளர்கள் புதிய ஆய்வுகளை மேற்கொண்டனர். மிக‌ப்பெரிய நிலச்சரிவுக்கான சாத்தியம் இருப்பதாக அவர்களது ஆய்வுகள் கூறின. நிர்வாகத்தைப் பொறியியலாளர்கள் எச்சரித்தனர். அவர்களது எச்சரிக்கையையும் நிர்வாகம் உதாசீனப்படுத்தியது.
அணைக்கு எதிரான போராட்டம் வலுப்படுவதை உணர்ந்துகொண்ட நிர்வாகம் வஞ்சக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டது. SADE நிறுவனத்தை இத்தாலி அரசே ஏற்று நடத்துமாறு அரசிடம் கோரிக்கை வைத்தது. நிறுவனத்தை அரசு ஏற்றுக்கொண்ட பின்னரும் கூட, அதன் தலைமை நிர்வாகிகளாக SADE -இன் பழைய முதலாளிகளே இருக்க வேண்டும் என்று இத்தாலி அரசை SADE கேட்டுக் கொண்டது. அந்த விருப்பத்தை இத்தாலி அரசு நிறைவேற்றவும் செய்தது.
1963 ஆம் ஆண்டில் பொதுத் துறை நிறுவனமாக மாறிப்போன SADE, அணையை மீண்டும் முழுமையாக நிரப்ப முடிவு செய்தது. ஜூலை மாதம் அணையில் நீர் முழுமையாக நிரப்பப்பட்டது. அப்போது கடந்த காலத்தைப் போலவே நில அதிர்வுகளும், நிலச்சரிவுகளும் மீண்டும் உருவாகத் தொடங்கின. செப்டம்பர் 13 ஆம் தேதியன்று மாண்டெ டாக் மலையின் ஒரு பகுதி முழுவதும் மெல்லச் சரியத் தொடங்கியது. செப்டம்பர் 26 ஆம் தேதி அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க நிர்வாகம் முடிவு செய்தது. நீர்மட்டத்தைக் குறைத்துக் கொண்டிருக்கும்போதே மலைப்பகுதி மேலும் அதிகமாக சரியத் தொடங்கியிருந்தது. நிகழப்போகும் பேரிடர் குறித்து பகுதி மக்களிடம் எச்சரிக்க எவ்வித முயற்சியையும் அணைக்கட்டு நிர்வாகம் எடுக்கவில்லை.
1963 அக்டோபர் 9 ஆம் தேதி மாலை நேரம் அந்தப்பகுதியில் கடுமையான மழை பெய்யத் தொடங்கியிருந்தது. இரவு 10.39 மணிக்கு மாண்டெ டாக் மலையின் ஒரு பகுதி முழுவதுமே அணைக்குள் சரிந்து விழுந்தது!
பேரிடர்க்குள்ளான பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்மலையின் இடிபாடுகள் அணையின் நீருக்குள் விழுந்ததால் அணையில் இருந்த சுமார் 5000 கோடி லிட்டர் தண்ணீரானது 250 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு மேலெழும்பியது. 262 மீட்டர் அணை உயரத்தையும் தாண்டி அது சுற்றியிருந்த பகுதிக்குள் பாய்ந்தது.
லாங்கரோன், பிராகோ, ரிவால்டா, வில்லனோவா, பே ஆகிய கிராமங்களை அது தரைமட்டமாக்கியது. சுமார் 2000 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பிறகே வஜோண்ட் அணைக்கட்டுத் திட்டம் ஒருவழியாகக் கைவிடப்பட்டது.
எவராலும் எதிர்பார்க்க முடியாத இயற்கை செயல்பாடுதான் இந்த நிகழ்வுக்கான காரணம் என்று இத்தாலி அரசு அறிவித்தது. ஊடகங்களில் இது குறித்து வாதி-பிரதிவாதி சண்டைகள் நடந்தன. இது கடவுளின் செயல் என்று பல பத்திரிகைகள் எழுதின. இது எதிர்பாராத இயற்கை நிகழ்வுதான் என்று பிரதம மந்திரி ஜியோவான்னி லியோன் சத்தியம் செய்தார். ஆனால் அடுத்து வந்த தேர்தலில் அவர் தோற்றுப் போனார். தோல்வி அடைந்த மறுநாளே அவர் மக்களின் படுகொலைக்குக் காரணகர்த்தா என்று குற்றம் சாட்டப்பட்ட SADE நிறுவனத்தின் மூத்த வக்கீலாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
SADE -க்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் மக்களால் நெருங்கமுடியாத மலை நகரமான L'Aquila – வில் நடத்தி முடிக்கப்பட்டது. SADE நிறுவனத்தின் அதிகாரிகள் வெகு சிலருக்கே தண்டனை அளிக்கப்பட்டது. மிகவும் குறைவான தண்டனையை அவர்களுக்கு வழங்கி விசாரணையை நீதிமன்றம் முடித்துக் கொண்டது. SADE நிறுவனத்திற்கு எதிராக எவ்வித நவடிக்கையையும் எடுக்க முடியாது என்று இத்தாலி அரசாங்கம் திட்டவட்டமாகக் அறிவித்தது. ஆனால், மனசாட்சியின் உறுத்தலால் பாதிக்கப்பட்ட SADE நிறுவனத்தின் பொறியியாளரான மரியோ பேன்சினி ஐந்தாண்டுகள் கழித்து 1968 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார்.
பொறியியல் மற்றும் நிலவியல் அசிரத்தையால் மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட உலகின் மிகப் பெரிய ஐந்து பேரிடர் நிகழ்வுகளில் ஒன்றாக 2008 ஆம் ஆண்டில் வஜோண்ட் பேரழிவை யுனெஸ்கோ அறிவித்தது.
இந்திய அணுசக்திக் கழகமானது கூடங்குளம் அமைவிடத்தின் நிலவியல் மற்றும் கடலியல் உண்மைகளை அறிந்துகொள்ளத் தேவைப்படும் எவ்வித முயற்சியையும் இன்றளவும் எடுக்க மறுத்து வருகிறது. அதன் போக்கைக் கண்டிக்க வேண்டிய அணு சக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தை அது விலங்கிட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளது. மத்திய அரசும் இந்த செயல்பாட்டை ஊக்குவித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு வஜோண்ட் பேரழிவு உருவாவதற்கான அனைத்து வாய்ப்பும் உருவாகியுள்ளது. 
இதைத் தடுக்க என்ன செய்யப் போகிறோம்?
- ரா.ரமேஷ் ( cypherandone@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )