Monday, 28 November 2011

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு மிக மிகச் சாதாரணம்!


திருச்சி
ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு மிக மிகச் சாதாரணம்

First Published : 27 Nov 2011 01:25:26 PM IST


திருச்சி, நவ. 26: அணு உலைகளுடன் ஒப்பிடும்போது ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டு மிக மிகச் சாதாரணம் என்றார் எழுத்தாளர் ஞாநி.  திருச்சி களம் அமைப்பின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் "அணு அரசியல்' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:  "கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை நடத்துவோர் இத்தனை நாள் எங்கே போனார்கள் என்கிறார்கள். 1987-90-களில் கடுமையான போராட்டம் நடைபெற்றது.   1990-களில் சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு, 10 ஆண்டுகள் கூடங்குளம் திட்டம் கிடப்பில் போடப்பட்டு, 2001-ல் புதிய ஒப்பந்தம் போடப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, போராட்டமும் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.   சிந்திக்கக்கூடிய மக்கள் கூடங்குளம் அணு உலையை மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து அணு உலைகளையும் மூட வேண்டும் எனக் கேட்க வேண்டும். "செர்னோபில்' விபத்து ஒரு கண்டத்தையே பாதித்தது என்ற வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.  கூடங்குளம் அணு உலை வந்தால் மின்சாரத் தட்டுப்பாடு போய்விடும் என்பது வடிகட்டின பொய். 1962 முதல் இவர்கள் கூறிவந்த அளவுக்கு இதுவரையிலும் மின்சாரம் கிடைக்கவில்லை. கொடுத்த இலக்கில் ஒரு சதத்தைக்கூட அணு உலைகள் நிறைவு செய்யவில்லை. 1999-ல் மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அதிகாரியே இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.  இதுவரை அணுசக்தி குறித்த மக்களின் எந்தக் கேள்விக்கும் சம்பந்தப்பட்ட துறை பதிலளித்ததே இல்லை. இதுதொடர்பாக பேசுவதே குற்றம் என்றுதான் சொல்லப்பட்டு வந்தது. முதல்முறையாக கூடங்குளத்தில் மக்களின் அசராத போராட்டத்துக்குப் பிறகு பதில் என்ற பெயரில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.  அணு உலையை இயக்க ஒரு நாளைக்கு 6 லட்சம் லிட்டர் நல்ல தண்ணீர் வேண்டும். பேச்சிப்பாறை அணையிலிருந்து எடுக்க முடியுமா? இந்த அணை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், பாதிக்கும் அதிகம் வண்டல் மண்தான் நிரம்பியிருக்கிறது. போதுமான தண்ணீர் கிடைக்காவிட்டாலும், உலையைக் குளிர்விக்க முடியாமல் வெடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.  ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டை பேரழிவாகக் கருதுகிறோம். தற்போது அமைக்கப்படும் அணு உலைகளோடு ஒப்பிடும்போது, அங்கு போடப்பட்ட அணுகுண்டு மிக மிகச் சாதாரணம்.  அணுசக்தியால் ஏற்படும் விபத்துகளுக்கு அரசு நிறுவனம் உள்பட எந்தக் காப்பீட்டு நிறுவனங்களும் காப்பீடு- இழப்பீடு வழங்குவதில்லை. கூர்ந்து கவனித்தால் இது புரியும்.  இப்போது அரசு இந்த அணுஉலைகளை நடத்தி, ஒரு கட்டத்தில் தனியாருக்கு அளிப்பதுதான் திட்டம். இப்போது மூடிவிட்டால் தனியாருக்குக் கொடுக்க முடியாது என்பதே மத்திய அரசின் கவலை.  குறைந்த கட்டணத்தில் மின்சாரம் கிடைக்கும் என்பதும் தவறான கருத்து. ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 16 முதல் ரூ. 20 வரைக்கும் விலையாக நிர்ணயம் செய்யப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  ஆண்டுக்கு 4 மாதங்கள் மட்டுமே வெயிலைப் பார்க்கும் ஜெர்மன் நாட்டின் மொத்த மின்சக்தியில் 20 சதம் சூரிய ஒளியில் இருந்துதான் மின்சாரம் எடுக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 300 நாள்கள் மேகங்கள் இல்லாத நாள்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.  தாவரங்களைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் சிறிய சிறிய ஏற்பாடுகளை கிராமங்களில் செயல்படுத்தலாம். இதற்கான முன்னுதாரணங்கள் நிறைய இருக்கின்றன. மின்சாரத்துக்காக குண்டு சுமக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார் ஞாநி.  கூட்டத்துக்கு, பா. சந்திரகாந்த் தலைமை வகித்தார். கவிஞர் நந்தலாலா அறிமுகவுரை நிகழ்த்தினார். இரா. சுவாமிநாதன் வரவேற்றார்.   சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் எழுத்தாளர் மெய். சேது ராமலிங்கம் எழுதிய "பேரழிவுக்கான அணு சக்தி ஒப்பந்தங்கள்' என்ற நூலை ஞாநி வெளியிட, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே. சந்திரசேகர், அமைப்பாளர் அ. கிரகோரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment