Thursday, 1 September 2011

பாழாறு ஆன பரணியாறு!

பாழாறு ஆன பரணியாறு!
கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. ‘ஆறு இல்லாத ஊர் பாழ்!’ அப்படித்தான் தமிழ்நாட்டின் நிலைமை மாறிவருகிறது. தாமிரபரணி, பாலாறு என்று தமிழ்நாட்டின் முக்கியமான ஆறுகள் எல்லாம் இயந்திரங்களால் கூறுபோட்டு, கிழிக்கப்பட்டு வருகின்றன. மழை பெய்து வெள்ளம் வந்தாலும் ஆற்றில் நீர் தங்காமல், அப்படியே அடித்து கடலுக்குச் சென்று வீணாகும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் வர்த்தகம் கொழித்துவருவதால் மணல் வியாபாரமும் அளவுக்கு அதிகமாக பெருகிவிட்டது. தமிழ்நாட்டில் அள்ளப்படும் மணல் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும்கூட கடத்தப்படுகின்றன. அப்படி தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து அதிகப்படியான மணல் அள்ளப்படுவதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உடன்வாதியாக சேர்ந்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவை சந்தித்து, மணல் குவாரி தொடர்பாக நடந்த நீதிமன்ற விசாரனை குறித்து விரிவாகப் பேசினோம்.

‘‘தமிழ்நாட்டில் பெரிய ஆறுகள், படுகை ஆறுகள் என்று மொத்தம் 33 ஆறுகள் ஓடுகின்றன. எல்லா ஆறுகளிலேயும் மணல் அள்ளுகிறார்கள். அதுவும் வரைமுறையில்லாமல், விதிமுறைகளை மீறி மணல் அள்ளுகிறார்கள். இதை எதிர்த்து, அந்தந்தப் பகுதிகளில் உள்ள சமூக ஆர்வலர்கள் பலர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். தாமிரபரணி ஆற்றுப் படுகையில் இருக்கும் மக்களும் மணல் அள்ளுவதால் பாதிக்கப்பட்டு, இதேபோன்ற மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார்கள். மனுவை விசாரித்த நீதிபதிகள், மணல் அள்ள பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தக் கூடாது என்று தற்காலிக தீர்ப்பு அளித்தார்கள். இந்தத் தற்காலிக தடையை ரத்து செய்யவேண்டும் என்று அரசு தரப்பிலும், ஒப்பந்தக்காரர்கள் தரப்பிலும் மனு செய்யப்பட்டது.

ஆனால், தற்காலிக தீர்ப்புக்கு தடை விதித்துவிடக் கூடாது என்பதில் பொது மக்களும், வழக்கறிஞர்களும் உறுதியாக இருந்தார்கள். எனவே இந்த வழக்கில் என்னையும் உடன்வாதியாக இணைந்து வழக்கை நடத்தச் சொல்லி வலியுறுத்தினார்கள். அந்தக் கோரிக்கையை ஏற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், நானும் ஒரு மனு தாக்கல் செய்தோம். மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் ஆஜராக என்னை அனுமதித்தனர். அதன்பிறகு விசாரணை தொடங்கியது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவரும், மணல் குவாரி உரிமையாளர்களின் சார்பில் ஒரு வழக்கறிஞரும் வாதாடினார்கள்.

‘கான்க்ரீட் வீடுகள் கட்டுவதற்கும், அரசின் வீடுகட்டும் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் மணல் அவசியம். ஆகவே, மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கவேண்டும். ஆட்களை வைத்து மணல் அள்ளுவதால், மணல் தேவை பூர்த்தியாகாமல் போகிறது. அதனால், பொக்லைன் வைத்து மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கவேண்டும்’ என்று வாதாடினார்கள்.

அதன்பிறகு எங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தோம்.

‘பொக்லைன் பயன்படுத்தினால், அளவுக்கு மீறி மணல் அள்ளப்படும். விதிமுறைப்படி 3 அடிகளுக்கு மேல் ஆற்றை ஆழப்படுத்தி, மணல் அள்ளக்கூடாது. மணல் அள்ளுகிற இடத்திலிருந்து 50 மீட்டர் தூரத்தில் நீர்ப்பாசனத் திட்டங்கள் இருந்தால், அங்கே மணல் அள்ளக்கூடாது. ஆற்றை மறித்து மணல் அள்ளக்கூடாது. அதேபோல், பொக்லைன் பயன்படுத்தி மணல் அள்ளக்கூடாது. ஆனால், பொறியாளர்களின் சிறப்பு அனுமதி பெற்று மணல் அள்ளலாம். அதுவும், காலை 8 முதல் மாலை 6 மணி வரைதான் மணல் அள்ளவேண்டும். அதன்பிறகு ஆற்றில் இறங்கக்கூடாது. ஒரு லாரிக்கு ஒரு யூனிட் மணல் மட்டுமே அள்ள வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இந்த எல்லா விதிகளையும் புறக்கணித்துவிட்டு ஒரு லாரிக்கு 4 யூனிட் மணல் அள்ளுகிறார்கள். ஒரு லாரிக்கு மட்டுமே பர்மிட் வாங்கிவிட்டு அதிகமான லாரிகள் வைத்து மணல் அள்ளுகிறார்கள்.

அப்படி அள்ளப்படும் மணல், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. ஆக, இதை லாப நோக்கோடு மட்டுமே செய்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு மணல் அள்ளவில்லை. அப்படியே மக்களுக்கு தேவையிருந்தால், ஆங்காங்கே குடோன்களில் இருப்பு வைத்திருக்கிற மணலை மக்கள் பயன்படுத்த அளிக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல் விலை ஏற்றத்துக்காக மட்டும் மணலை பதுக்குகிறார்கள். எனவே, பொக்லைன் பயன்படுத்தி மணல் அள்ளுவதை அனுமதிக்கக் கூடாது. ஆட்களைப் பயன்படுத்தி மட்டுமே மணல் அள்ள அனுமதிக்க வேண்டும். அதுவும், பர்மிட் பெற்றிருக்கிற லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்’ என்று வாதாடினோம்.

இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் ஒரு எக்ஸ்பர்ட் கமிட்டியை அமைத்தது. அந்தக் குழுவில் உயர்நீதிமன்ற பதிவாளர், ஒரு தொல்லியல் ஆய்வாளர், மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சுற்றுச் சூழல் & புவியியல் துறை பேராசிரியர் சந்திரசேகர் உள்ளிட்ட மூன்று பேர் உள்ளனர். இந்தக் குழு, தமிழ்நாட்டில் மணல் அள்ளப்படுகிற இடங்களில் எல்லாம் நேரில் சென்று ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவை அந்தக் குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

‘மணல் அள்ளுவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் விதிகள் அனைத்தும் மீறப்பட்டு இருக்கின்றன. 3 அடிக்கு பதிலாக 10 அடிக்கு மேல் மணல் அள்ளியிருக்கிறார்கள். வண்டல் மண்ணைத் தாண்டி, களிமண் தெரிகிற அளவுக்கு எல்லா இடங்களிலும் மணல் அள்ளப்பட்டு இருக்கிறது. ஆக, ஆறு பாழாகிவிட்டது; ஆற்றையே அழித்துவிட்டார்கள்’ என்று எக்ஸ்பர்ட் கமிட்டி தன்னுடைய முடிவை தெரிவித்தது.

இதை விசாரித்த நீதிமன்றம், மணலை எடுத்தவர்களே ஆழப்படுத்திய இடத்தை நிரப்பவேண்டும். அளவுக்கு மீறி மணல் அள்ளப்பட்டு இருப்பதால், இயற்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதனால், இனி ஐந்து ஆண்டுகளுக்கு அந்த இடத்தில் மணல் அள்ளக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. அதேபோல் அரசு தரப்பிலும், தாமிரபரணியிலும் பாலாற்றிலும் மணல் அள்ளவே கூடாது என்று கூறப்பட்டு இருக்கிறது.

எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த இரண்டு ஆண்டுகளில்தான் மிக அதிகப்படியாக மணல் அள்ளப்பட்டு இருக்கிறது. தவிர, தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லா ஆறுகளிலும் மணல் அள்ளப்பட்டு இருக்கிறது. எனவே இனி இப்படி நடக்கக் கூடாது என்பதால், இதைக் கண்காணிக்க நெல்லை, திருச்சி, கோவை, சென்னை ஆகிய நான்கு மண்டலங்களுக்கும் தனித்தனியாகக் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் குழுக்கள் மாவட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகளின் தலைமையில் இயங்கும். அந்தக் குழுக்கள் மணல் அள்ளுவது தொடர்பாக வருகிற வழக்குகளை விசாரிக்கும். அதேபோல், ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுமைக்கும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது, தமிழ்நாடு மணல் லாரி கூட்டமைப்பு சார்பாக, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். மறுநாள், வழக்கில் தங்களையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும்; தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று மனு போட்டார்கள். அதில், ஆட்களை வைத்து மணல் அள்ளுவதால், தேவையான மணல் எங்களுக்கு கிடைப்பதில்லை. அதனால், பொக்லைன் பயன்படுத்த அனுமதி அளிக்கவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது. ஆனால், நீதிபதிகள் இதை பரிசீலனை செய்யமுடியாது என்று கூறிவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி கட்டற்ற வகையில் மணல் அள்ளப்படுகிறது. கேரளாவில் பொக்லைன் பயன்படுத்தவே கூடாது; மீறுபவர்களுக்கு ஒருவருடத்தில் இருந்து இரண்டு வருடங்களுக்கு சிறை தண்டனை. அதேபோல் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் பொக்லைன் பயன்படுத்தி மணல் அள்ளுகிறார்கள். எனவே, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அந்தச் சட்டங்கள் எப்படி அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதை எப்படி நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதையெல்லாம் ஆய்வுக்குழுக்கள் ஆய்வுசெய்து வருகின்றன.

மணல் சாதாரணமாக உருவாகிவிடாது. ஆற்றில் வெள்ளம் வந்தால் மட்டுமே பாறைகளையும் கற்களையும் கரைத்து மணல் உருவாகும். ஒரு கன அடி மணல் உருவாக கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு மேல் ஆகின்றன. அதேபோல், தண்ணீரையும் சுத்தப்படுத்தி, பூமிக்குள் நீரை சேமித்து வைக்கக்கூடிய திறனும் மணலுக்கு மட்டுமே உண்டு. அப்படிப்பட்ட மணலை அள்ளிவிட்டால், வெள்ளம் வந்தாலும் நீர் நிலத்தில் தங்காது; கடலில் கலந்து வீணாகிவிடும். ஊற்றும் இருக்காது. கூட்டுக்குடிநீர் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. மணல் இருந்தால்தான் கோடைகாலத்தில் தண்ணீர் கிடைக்கும். இதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்’’ நல்லக்கண்ணு வேதனையோடு முடித்தார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 51கி&யின்படி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். ஆனால், இது கட்டாயமான விதி அல்ல என்பதால், யாரும் அதை கண்டுகொள்வதில்லை. ஆனால், ஒவ்வொருவரும் விதியாக அல்லாமல் அதைக் கடமையாகவே பின்பற்றவேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்து.

- சா.இலாகுபாரதி

nandri- thenoli inaiya ithal

No comments:

Post a Comment