Tuesday, 27 September 2011

பிளாஸ்டிக் இல்லாத குமரி மாவட்டம்!

தூக்கி எறிந்து விடக்கூடிய ப்ளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை பல இடங்களில் எழுத்தளவில் மட்டுமே உள்ளது. ஆனால் கன்னியாகுமரியில் மக்கள் வெகுசிரத்தையுடன் இந்த தடையை ஆத்மார்த்தமாக பின்பற்றி வருகிறார்கள்.

கன்னியாகுமரிக்கு சென்று பார்த்தால் ப்ளாஸ்டிக் மீதான தடை  அங்கே உண்மையில் கடைப்பிடிக்கப்படுவது தெரியவரும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக நகரப் பகுதிகளில்  கழீவு நீர் பாதைகளை அடைத்துக் கொண்டும், சாலை ஓரங்களிலும் நீர் நிலைகளின் ஓரங்களிலும் சாதாரணமாகக் காணப்படும் ப்ளாஸ்டிக் பைகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் அபூர்வமாகத்தான் காண முடியும்.

ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான இயக்கத்தை கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் இதன் மீதான தடை அமலுக்கு வருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. இதனை அடுத்து மாவட்ட மக்களிடையே தூக்கி எறிந்து விடக்கூடிய ப்ளாஸ்டிக்குகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சிறப்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

ப்ளாஸ்டிக்குக்கு எதிரான இயக்கத்திற்கு எவ்வித எதிர்ப்பும் கிளம்பாதபடி பார்த்துக் கொள்வதற்காக, அடித்தள நிலைகளில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்ற குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், அரசு ஊழியர்கள் என இயற்கையை பாதுகாப்பதில் ஆர்வமுள்ள அனைவரும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

ப்ளாஸ்டிக் பொருட்களினால் அடங்கியுள்ள பைபீனால்-ஏ, காலேட்டுகள் மற்றும் டயாக்சீன்கள் எவ்வளவு கேடு விளைவிக்கக்கூடியவை என்பதை வலியுறுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. உலக சுற்றுச்சூழல் தினம், உலக கடல் தினம், கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகள், அரசுத் திட்டங்கள் என எல்லா நிகழ்வுகளிலும் பொது மக்கள் ப்ளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் பயன்படுத்திக் கொண்டது.

இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் மாவட்ட ஆட்சித் தலைவரே நேரில் பங்கேற்பார் அல்லது சுற்றுச்சூழல் உதவிப் பொறியாளர் போன்றவர்கள் பங்கேற்பார்கள்.

உயிரியல் முறையில் அழிந்துவிடக்கூடிய பைகளையும், பெட்டிகளையும் பயன்படுத்துமாறும், ப்ளாஸ்டிக் பயன்பாட்டை கைவிடுமாறும் இந்த அதிகாரிகள் மக்களை கேட்டுக் கொண்டனர்.தொடக்கத்தில் கன்னியாகுமரியிலும் மக்கள் ப்ளாஸ்டிக் அல்லாத பைகள், கப்புகள் ஆகியவற்றை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டினார்கள். இது இயற்கையே! எனினும், தொடர்ச்சியான விழிப்புணர்வு காரணமாக கழிவு நீர்பாதைகள் அடைபடுவதும், அதனை தொடர்ந்து கொசுக்கள் பெருகுவதும், அதனால் ஦டிங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படுவதும் மக்களால் உணரப்பட்டது.

ப்ளாஸ்டிக் பொருட்கள் மீதான சட்டப்பூர்வ தடை ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்தது. இந்த தடை உத்தரவில், மக்கள் தங்கள் ப்ளாஸ்டிக் பயன்பாட்டை மாற்றிக் கொள்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த தடையை அமல்படுத்துவதற்கு என, கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் பொது மக்கள் உள்ளூர் அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த குழுவினர் தடையை மீறுவோர் பற்றிய தகவல்களை தெரிவித்தனர்.

இந்த தகவல்கள் அடிப்படையில் அதிகாரிகள் கொண்ட செயல்பாட்டுக் குழுவினர், சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். செயல்பாட்டுக் குழுவில் மாசு கட்டுப்பாடு வாரியம், பொதுச் சுகாதாரம், வருவாய் துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள், உள்ளூர் காவல் துறை உதவியுடன் ப்ளாஸ்டிக் தடையை மீறுவோருக்கு எதிராக அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்த தடையை அமல்படுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட எவரும்  தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கவே இல்லை.

இதுபற்றி ஒரு விவசாயி கருத்து தெரிவிக்கையில், ப்ளாஸ்டிக் பொருட்களை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதால், பல ஆண்டுகளாக உரம் தயாரிக்க பயன்பட்டு வந்த வீட்டு குப்பையின் தரம் கெட்டுப்போனதாக ஆவேசமாக கூறினார்.

கன்னியாகுமரியில் விவசாயிகள் பலர் இயற்கை முறை விவசாயத்திற்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் ஆகியவை மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மாபெரும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ப்ளாஸ்டிக் தடை உத்தரவுக்கு பிறகு ஒருவர் சந்தைக்குச் சென்றால், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை எடுத்துச் செல்லத் தொடங்கினார்கள்.

சில சமயங்களில், காய்கறி பழம், மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு முன்னதாக துணி பைகளையும் வாங்கிக் கொண்டனர்.இறைச்சி கடைகளில் வாடிக்கையாளர்கள் பாத்திரங்களை கொண்டு வந்து வாங்கிச் செல்லவேண்டும். இல்லாவிடில் இறைச்சி காகிதங்களில் பொட்டலங்களாக மடித்து தரப்படும்.

தேநீர் கடைகளில் கண்ணாடி டம்ளர்களில் தேநீர் விற்கப்படும். வாடிக்கையாளர்கள் விரும்பினால், காகிதக் குவளைகளில் தேநீர் வழங்கப்படும். வியாபாரிகள் முடிந்த அளவுக்கு சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது ஆச்சர்யகரமாமன வரவேற்கத் தகுந்த மாறுதல் தானே.!

இந்த வெற்றிக்கு காரணமென்ன என்று கேட்டபோது, உணர்வுப் பூர்வமாக ப்ளாஸ்டிக்குக்கு எதிரான இயக்கத்தை ஏற்றுக் கொண்ட மக்களே முதல் காரணம் என்றும், அர்ப்பணிக்கும் மனப்பான்மை கொண்ட அதிகாரிகள் அதற்கு அடுத்தபடியாக இதற்கான பெருமையை பெறுகிறார்கள் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் கடந்த பத்து மாதங்களாக நிர்வாகம் எடுத்துவரும் அனைத்து முயற்சிகளையும் விளக்க ஆர்வத்துடன் முன்வருகின்றனர்.

ப்ளாஸ்டிக் இல்லாத கன்னியாகுமரி, ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்து ப்ளாஸ்டிக்குகளை ஒழித்ததுடன் மாவட்டத்தின் அழகை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் சொல்கிறது என்பதுதான் உண்மை.

இப்போது நாட்டின் அனைத்து மாவட்ட மக்களும் கன்னியாகுமரி மக்களை பார்த்து பொறாமைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த கட்டம், நாடெங்கிலும் உள்ள மக்கள் கன்னியாகுமரியின் அடிச்சுவட்டை பின்பற்றி தூக்கி எறிந்துவிடக்கூடிய ப்ளாஸடிக்குகளை ஒழிக்க முன்வரவேண்டும் என்பதுதான்.

No comments:

Post a Comment