காவிரிக் கரையில் கொட்டப்பட்ட "கார்பைடு' கல்கள்!
காவிரிக் கரையில் கொட்டப்பட்ட "கார்பைடு' கல்கள்!
First Published : 30 Jul 2011 11:21:28 AM IST
திருச்சி, ஜூலை 29: கார்பைட் கல்கள் வைத்து மாம்பழங்களைப் பழுக்க வைக்கக் கூடாது என்று உத்தரவு இருந்த போதும், அவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட பிறகு அந்தக் கல்களை காவிரியாற்றின் கரையில் கொட்டிவிட்டிருக்கிற செயல் பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. ஒரு வகை சுண்ணாம்பு "கால்சியம் கார்பைட்'. சிறிய அளவிலான காகிதப் பைகளில் இவற்றை நிரப்பி, மாம்பழம் போன்ற பழங்களுக்கு நடுவே வைத்துவிட்டால் காயாக உள்ளவை ஒரே இரவில் பழமாகிவிடும். ஆனால், இவ்வாறு பழுக்கச் செய்யும் பழங்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை. வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே, மாம்பழ சீசன் வரும்போதெல்லாம் இந்த கார்பைடு கல்களை வைத்துப் பழுக்க வைப்பது சட்டப்படி குற்றம் என்ற அறிவிப்பும், அதைத் தொடர்ந்து சில இடங்களில் பழங்களைப் பறிமுதல் செய்வதும், வழக்கு போடுவதும் வழக்கம். இந்த நிலையில், ஏறத்தாழ மாம்பழ சீசன் முடிவடைந்துள்ள காலகட்டத்தில், சுமார் 25 கிலோ அளவிடத்தக்க கார்பைடு கல்கள் (மாம்பழங்களுக்கு நடுவே வைக்கப்படும் சிறிய காகிதப் பைகளுடன்) மாம்பழச் சாலையில் "பார்சன்' காலனிக்கு அருகேயுள்ள சிறிய படித்துறையில்- காவிரிக் கரையில் கொட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. திருச்சியில் அண்மையில் தொடங்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கூட்டமைப்பினரின் முயற்சியில், ஸ்ரீரங்கம் பகுதியில் ஒரு புள்ளிவிவரக் கணக்கெடுப்பை நடத்தி வரும் தூய வளனார் கல்லூரி "செப்பர்டு' மாணவ, மாணவிகள் கண்களில் இவை சிக்கின. இதைத் தொடர்ந்து, அந்த இடத்துக்குச் சென்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே. சந்திரசேகர், அமைப்பாளர் கிரகோரி ஆகியோர் இதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட பகுதி சுகாதார ஆய்வாளருக்குத் தெரிவித்தனர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே. சந்திரசேகர் கூறியது: "ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள 6 வார்டுகளை ஒருங்கிணைத்து சுகாதாரப் பாதுகாப்பு செய்யப்பட்ட மாதிரிப் பகுதியாக மாற்றும் திட்டம் ஒன்றைத் தீட்டியிருக்கிறோம். அதற்காக, கடந்த 3 நாள்களாக "செப்பர்டு' மாணவ, மாணவிகளைக் கொண்டு ஸ்ரீரங்கம், திருவானைக்கா பகுதிகளை ஆய்வு செய்தும் வருகிறோம். தெருக்களின் விவரம், மரக்கன்று நடும் வாய்ப்புள்ள இடங்கள், குப்பைகள் சேரும் இடங்கள், அந்தக் குப்பைகளை வெளியேற்றும் தற்போதுள்ள நடைமுறை போன்ற விவரங்களைச் சேகரித்து வருகிறோம். இவ்வாறான பணியில்தான் கார்பைடு கல்கள் காவிரிக் கரையில் கொட்டப்பட்டுள்ள தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கவுள்ளோம்' என்றார் சந்திரசேகர். இதுதொடர்பாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தது: "கார்பைடு கல்களால் தோலில் எரிச்சல், புண் ஏற்படும். தற்போது காவிரியில் தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இல்லை. என்றாலும், இது குற்றம்தான்' என்றன அந்த வட்டாரங்கள். இதுகுறித்து மாநகராட்சி செயற்பொறியாளர் சந்திரன் கூறியது: "கார்பைடு கல்கள் காவிரியில் கலப்பது மனித உடலுக்கு தீங்கை விளைவிக்கும். இதுகுறித்த தகவல் கிடைக்கப்பெற்றவுடன், அப்பகுதி சுகாதார ஆய்வாளர் பாண்டியராஜன் தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக களத்தில் இறங்கி சுமார் இரு லாரிகளில் கார்பைடு கல்கள் அகற்றப்பட்டன. இனி இதுபோல் எதுவும் நடக்காமல் அப்பகுதியில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்' என்றார் சந்திரன்.