Sunday, 31 July 2011

காவிரிக் கரையில் கொட்டப்பட்ட "கார்பைடு' கல்கள்!

காவிரிக் கரையில் கொட்டப்பட்ட "கார்பைடு' கல்கள்!


காவிரிக் கரையில் கொட்டப்பட்ட "கார்பைடு' கல்கள்!

First Published : 30 Jul 2011 11:21:28 AM IST


திருச்சி, ஜூலை 29: கார்பைட் கல்கள் வைத்து மாம்பழங்களைப் பழுக்க வைக்கக் கூடாது என்று உத்தரவு இருந்த போதும், அவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட பிறகு அந்தக் கல்களை காவிரியாற்றின் கரையில் கொட்டிவிட்டிருக்கிற செயல் பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. ஒரு வகை சுண்ணாம்பு "கால்சியம் கார்பைட்'. சிறிய அளவிலான காகிதப் பைகளில் இவற்றை நிரப்பி, மாம்பழம் போன்ற பழங்களுக்கு நடுவே வைத்துவிட்டால் காயாக உள்ளவை ஒரே இரவில் பழமாகிவிடும். ஆனால், இவ்வாறு பழுக்கச் செய்யும் பழங்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை. வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே, மாம்பழ சீசன் வரும்போதெல்லாம் இந்த கார்பைடு கல்களை வைத்துப் பழுக்க வைப்பது சட்டப்படி குற்றம் என்ற அறிவிப்பும், அதைத் தொடர்ந்து சில இடங்களில் பழங்களைப் பறிமுதல் செய்வதும், வழக்கு போடுவதும் வழக்கம். இந்த நிலையில், ஏறத்தாழ மாம்பழ சீசன் முடிவடைந்துள்ள காலகட்டத்தில், சுமார் 25 கிலோ அளவிடத்தக்க கார்பைடு கல்கள் (மாம்பழங்களுக்கு நடுவே வைக்கப்படும் சிறிய காகிதப் பைகளுடன்) மாம்பழச் சாலையில் "பார்சன்' காலனிக்கு அருகேயுள்ள சிறிய படித்துறையில்- காவிரிக் கரையில் கொட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. திருச்சியில் அண்மையில் தொடங்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கூட்டமைப்பினரின் முயற்சியில், ஸ்ரீரங்கம் பகுதியில் ஒரு புள்ளிவிவரக் கணக்கெடுப்பை நடத்தி வரும் தூய வளனார் கல்லூரி "செப்பர்டு' மாணவ, மாணவிகள் கண்களில் இவை சிக்கின. இதைத் தொடர்ந்து, அந்த இடத்துக்குச் சென்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே. சந்திரசேகர், அமைப்பாளர் கிரகோரி ஆகியோர் இதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட பகுதி சுகாதார ஆய்வாளருக்குத் தெரிவித்தனர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே. சந்திரசேகர் கூறியது: "ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள 6 வார்டுகளை ஒருங்கிணைத்து சுகாதாரப் பாதுகாப்பு செய்யப்பட்ட மாதிரிப் பகுதியாக மாற்றும் திட்டம் ஒன்றைத் தீட்டியிருக்கிறோம். அதற்காக, கடந்த 3 நாள்களாக "செப்பர்டு' மாணவ, மாணவிகளைக் கொண்டு ஸ்ரீரங்கம், திருவானைக்கா பகுதிகளை ஆய்வு செய்தும் வருகிறோம். தெருக்களின் விவரம், மரக்கன்று நடும் வாய்ப்புள்ள இடங்கள், குப்பைகள் சேரும் இடங்கள், அந்தக் குப்பைகளை வெளியேற்றும் தற்போதுள்ள நடைமுறை போன்ற விவரங்களைச் சேகரித்து வருகிறோம். இவ்வாறான பணியில்தான் கார்பைடு கல்கள் காவிரிக் கரையில் கொட்டப்பட்டுள்ள தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கவுள்ளோம்' என்றார் சந்திரசேகர். இதுதொடர்பாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தது: "கார்பைடு கல்களால் தோலில் எரிச்சல், புண் ஏற்படும். தற்போது காவிரியில் தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இல்லை. என்றாலும், இது குற்றம்தான்' என்றன அந்த வட்டாரங்கள். இதுகுறித்து மாநகராட்சி செயற்பொறியாளர் சந்திரன் கூறியது: "கார்பைடு கல்கள் காவிரியில் கலப்பது மனித உடலுக்கு தீங்கை விளைவிக்கும். இதுகுறித்த தகவல் கிடைக்கப்பெற்றவுடன், அப்பகுதி சுகாதார ஆய்வாளர் பாண்டியராஜன் தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக களத்தில் இறங்கி சுமார் இரு லாரிகளில் கார்பைடு கல்கள் அகற்றப்பட்டன. இனி இதுபோல் எதுவும் நடக்காமல் அப்பகுதியில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்' என்றார் சந்திரன்.

Thursday, 28 July 2011

உலகமும், சுற்றுச் சூழல் மாசடைதலும்

உலகமும், சுற்றுச் சூழல் மாசடைதலும்

90 சதவீத மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு : டாக்டர்கள் அதிர்ச்சி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது; அதில், 90 சதவீத மாணவர்களுக்கு உடலில் குறைபாடு இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இயன்முறை மருத்துவ முகாம் நடத்த அரசு உத்தரவிட்டிருந் தது. அதன்படி, திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நேற்று நடத்தப்பட்டது; மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியம் துவக்கி வைத்தார். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை 440 மாணவ, மாணவியருக்கு இயன்முறை மருத்துவ முறையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. 15 இயன்முறை மருத்துவர்கள், மாணவ, மாணவியரை பரிசோதித்தனர். உடல் அமைப்பு, எடை, உயரம், கை, கால், உடல் இயக்கம் உள்ளிட்டவற்றை தனித்தனியாக பரிசோதனை செய்தனர். பெரும்பாலான மாணவ, மாணவியருக்கு தட்டை பாதம், கூன் விழுதல், முட்டி முட்டுதல், விரல் வளைந்திருத்தல் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது. சில மாணவர்கள், சராசரிக்கும் குறைவான உடல் எடை, உயரம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது. 440 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 420 மாணவர்களுக்கு உடலில் ஏதாவது ஒரு பிரச்னை இருப்பதை அறிந்து, டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில மாணவர்கள் மட் டுமே முழு உடல் தகுதியுடன் உள்ளனர். திருப்பூர் மாவட்ட முகாம் கண்காணிப்பாளரான, இயன்முறை டாக்டர் சத்யமூர்த்தி கூறுகையில்,""200 மாணவர்களில் இரண்டு மாண வர்கள் மட்டுமே முழு உடல் தகுதியுடன் இருக்கின்றனர். பார்வைக்கு ஆரோக்கியமாக தெரிந்தாலும், ஏதேனும் ஒரு குறைபாடு அவர்களது உடலில் இருக்கிறது. சிறு வயதில் இவர்களுக்கு இருக்கும் பிரச்னை, பருவ வயதில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும். 60 வயதில் வரக்கூடிய மூட்டுத்தேய்மானம், இடுப்பு வலி உள்ளிட்ட நோய்கள், இவர்களுக்கு 30 வயதில் வரும். பெற்றோருக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லா ததும், சத்தாண ஆகாரங்களை உட்கொள்ளாததும் இதற்கு காரணம். இப்போது, மாணவர்களின் பிரச்னைகளை கண்டறிந்து வருகிறோம். தொடர்ந்து மற்ற பள்ளிகளிலும் இதேபோல் முகாம் நடத்தப்பட்டு, கணக்கெடுக்கப்படும்,'' என்றார். அனைவருக்கும் கல்வித்திட்ட ஒன்றிய ஒருங்கிணைப் பாளர் ஜோதியப்பன் கூறுகையில், ""மாணவர் களுக்கு உடலில் குறைபாடு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை தர வேண்டும்,'' என்றார். முகாம் நடத்தி, குழந்தைகளுக்கான பாதிப்புகளை கண்டறிவதுடன் நிறுத்தி விடாமல், அவர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்க தேவையான பயிற்சிகளை கற்றுத்தரவும் அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்கள் குறித்து அறிவுறுத்துவதுடன், பெற்றோருக்கும் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

nandri- dinamalar- kovai edition

சாயப்பட்டறை கழிவு நீர் காவிரி, நொய்யலில் கலக்காமல் தடுக்க வலியுறுத்தல்

சாயப்பட்டறை கழிவு நீர் காவிரி, நொய்யலில் கலக்காமல் தடுக்க வலியுறுத்தல்

First Published : 28 Jul 2011 11:30:32 AM IST


கரூர், ஜூலை 27: ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் சாயக் கழிவு நீர் காவிரி, நொய்யலில் கலக்காமல் தடுக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் வெ. ஷோபனா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், விவசாயிகள் ஏற்கெனவே கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற விவாதம்:  உழவர் ஆய்வு மன்ற அமைப்பாளர் ஏ.வி. கோபாலதேசிகன் : கரூர் மாவட்டத்தில் குளங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.  அரியாறு வடிநிலக் கோட்டம், உதவி செயற்பொறியாளர் : கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்டங்களில் உள்ள 15 பொதுப்பணித் துறை குளங்களில் 6-ல் ஆக்கிரமிப்புகள் இல்லை. 3-ல் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. 3-ல் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். 3-ல் அளவீடு செய்ய வேண்டும்.  ஆட்சியர்: ஆக்கிரமிப்புள்ள குளங்கள் எவை?  உதவி செயற்பொறியாளர் : வடசேரி, வளையல்காரன்புதூர், வீரராக்கியம் குளங்கள்.  "நாம்' அமைப்பின் கரூர் மாவட்டச் செயலர் ஆர். செல்வராஜ், கவுண்டன்பட்டி ஆர். சுப்ரமணியம், கீழவெளியூர் கே.ஆர். ராஜு, வெள்ளப்பட்டி வி.கே. தங்கவேல்:  வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் போதிய ஊழியர்கள் இல்லாததால், பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, உரிய மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். கிணறு வெட்ட வழங்கப்பட்ட கடனுக்கான மானியம் 2 ஆண்டுகளாகியும் வழங்கப்படவில்லை.  கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் மோ. ஹேமா: கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளுக்குள்பட்டு மிகைப் பணியாளர்கள் மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.  கூட்டுறவு வங்கிகளில் வசூலிக்கப்படும் பணத்தை மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நேரில் சென்று வசூலிக்க தமிழகத்திலேயே முதல் முறையாக கரூர் மாவட்டத்தில்தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மானியம் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆர். செல்வராஜ் : குறைந்த மின் அழுத்தத்தால் கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாய மின் மோட்டார்கள் பழுதாகுகின்றன. மேலும், மின் கம்பங்களில் ஏற்படும் பழுதுகளையும் விவசாயிகளே சரி செய்ய வேண்டும் என்ற அளவில், மின் வாரியத்தில் ஆள் பற்றாக்குறை உள்ளது.  ஆட்சியர் : மின் கம்பங்களில் விவசாயிகள் ஏறிப் பழுது பார்க்கக் கூடாது. எதுவாக இருந்தாலும் மின் வாரியத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.  முன்னூர் வி. பூபதி: கார்வழி கிராமத்திலுள்ள ஆத்துப்பாளையம் அணை, கால்வாய், மதகுகள் ஆகியவற்றிலுள்ள ஷட்டர்கள் பராமரிப்பின்றி உள்ளன. அணை கட்டியதிலிருந்து திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் தேங்கி, அதனால் மண்டிய கழிவுகளுடன் இருப்பதால் அதைத் தூர் வார வேண்டும்.  விவசாயிகள் : தற்போது திருப்பூர் மாவட்டத்தில் சாயப் பட்டறைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், அங்கு தற்போது போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சாயப் பட்டறைகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கினாலும், அவற்றின் கழிவு நீர் கரூர் மாவட்டத்தில் காவிரி, நொய்யலில் வராமல் தடுக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் : நீதிமன்ற உத்தரவின்படி, தற்போது திருப்பூரில் சாயப் பட்டறைகள் மூடப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவின்படியே இதில் நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆட்சியர் : கரூர் மாவட்ட சாயப் பட்டறைக் கழிவுகளும் நீர் நிலைகளில் கலப்பதாகவும் புகார் வருகிறது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கவுண்டன்பட்டி ஆர். சுப்பிரமணியம் : கரூர் மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைக்கு யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. ஆகிய உரங்கள் தேவை. ஆனால், பொட்டாஷ் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது. மாவட்டத்தில் கையிருப்பில் எவ்வளவு உரம் உள்ளது?  வேளாண் அலுவலர் மதனகோபால்: கரூர் மாவட்டத்திற்கு இம்மாத பொட்டாஷ் ஒதுக்கீடு 1,100 டன். ஆனால், 47 டன் மட்டுமே வந்துள்ளது. கடந்த மாதக் கையிருப்பு 600 டன் உள்ளது. டி.ஏ.பி., யூரியா உள்ளிட்ட உரங்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன.  வேளாண் இணை இயக்குநர் கி. ஜெகதீசன் : உரத் தட்டுப்பாட்டைப் போக்க சீனாவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே, விரைவில் போதுமான உரங்கள் வந்து சேருமென எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் உர மூட்டைகளில் குறிக்கப்பட்டுள்ள விலையை மட்டுமே வழங்க வேண்டும்.  கவண்டன்பட்டி ஆர். சுப்பிரமணியம் : பட்டா மாறுதல், கணினிப் பட்டா பெறுதல் போன்றவற்றில் அதிகளவில் குளறுபடி உள்ளது.  மாவட்ட வருவாய் அலுவலர் தி. பிச்சையா: இதுகுறித்து புதிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதை அந்தந்தக் கிராம நிர்வாக அலுவலர்கள் அளவில் சரிசெய்து கொள்ளலாம்.  தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு கேள்விகளுக்கு, அரசு அலுவலர்கள் பதிலளித்தனர்.  

nandri- dinmani

சாலையோரத்தில் கருக்கள்: தனியார் ஆய்வக மேலாளர் கைது

சாலையோரத்தில் கருக்கள்: தனியார் ஆய்வக மேலாளர் கைது

First Published : 26 Jul 2011 03:57:50 PM IST


திருச்சி, ஜூலை 25: திருச்சியில் சாலையோரத்தில் குழந்தை கருக்கள் வீசப்பட்டு கிடந்தது தொடர்பாக தனியார் ஆய்வக மேலாளரை போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.  திருச்சி - மதுரை சாலையில் பஞ்சப்பூரில் புதை சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு சாலையோரத்தில் அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டு, குழந்தை கருக்கள் வீசப்பட்டு கிடந்தன. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.  இதுகுறித்து பஞ்சப்பூர் கிராம நிர்வாக அலுவலர் தர்மலிங்கம் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  இதன் பேரில், போலீஸôர் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், தில்லைநகரில் உள்ள தனியார் ஆய்வகத்தின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி அருகேயுள்ள மருத்துவக் கல்லூரியிலிருந்து கலைந்து போன கருக்களை பரிசோதனைக்காக வாங்கியது தெரிய வந்தது.   இந்நிலையில், மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டதால், இந்தக் கருக்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு மயானத் தொழிலாளர் நல்லுவிடம் ஆய்வக மேலாளர் விஜயராகவன் கூறினாராம்.   அதை எடுத்துச் சென்ற நல்லு அவற்றை சாலையோரம் வீசி விட்டுச் சென்று விட்டது தெரிய வந்தது. அப்போது, நல்லு மது அருந்தியிருந்ததால், இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.  என்றாலும், இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்ததாக விஜயராகவனை போலீஸôர் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

Monday, 25 July 2011

2008 nov. 18 dinamani


சாலையோரத்தில் குழந்தை கருக்கள்

சாலையோரத்தில் குழந்தை கருக்கள்
First Published : 25 Jul 2011 02:33:05 PM IST


திருச்சி,  ஜூலை 24: திருச்சியில் சாலையோரத்தில் குழந்தை கருக்கள் வீசப்பட்டு கிடந்ததால் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி- மதுரை சாலையில் பஞ்சப்பூரில் புதை சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு சாலையோரத்தில் பரிசோதனை மையங்களில் வைக்கப்பட்டிருக்கும் குழந்தை கருக்கள் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டு வீசப்பட்டு இருந்தன.சுமார் 50-க்கும் அதிகமான டப்பாக்களில் குழந்தை  கருக்கள் அடைக்கப்பட்டு அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டு வீசப்பட்டிருந்தன. இதைக் கண்டு அந்தப் பகுதி மக்கள் போலீஸôருக்கு தகவல் அளித்தனர்.எடமலைப்பட்டிப்புதூர் போலீஸôர் சென்று அவற்றைப் பார்வையிட்டனர். அப்போது, திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவப் பரிசோதனை மையத்தின் பெயர் அந்த அட்டைப் பெட்டிகளில் பொறிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீஸôர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து திருச்சியில் உள்ள மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் கூறியது:மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி ஆகிய இடங்களில் இதுபோன்ற வளர்ச்சியடையாத, இறந்த நிலையில் உள்ள குழந்தையின் கருக்கள் மாணவர்களின் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும். ஆனால், அவற்றை சாலையில் வீசுவதற்கு அவசியமில்லை. ஆனால் இத்தனை கருக்களை ஏன் வீசிச் சென்றனர் என்பது மர்மமாக உள்ளது. மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரியில் பணிபுரியும் யாரேனும், நிர்வாகத்தை பழி வாங்கும் எண்ணத்தில், பரிசோதனை மையத்தில் சோதனை செய்வதற்கு வைக்கப்பட்டிருந்த குழந்தைக் கருக்களை திருடிக் கொண்டு வந்து வீசிச் சென்றிருக்கலாம் என்றனர் அவர்கள்.
nandri- dinamani daily 25-07-2011

பிளாஸ்டிக் ?!

சுற்றுச்சூழல் மாசுபடுவதே பூமி வெப்பமடைய முக்கிய காரணம். மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கார்பன் டைஆக்சைடு, மீதேன் போன்ற வாயுக்களே சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. பூமி வெப்பமடைதவதால் மனிதகுலத்தின் வாழ்வுரிமை கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இதைத் தடுத்து சுற்றுச்சூழலை காக்க நாம் வாழும் இடத்தில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
பூமியின் பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் முக்கிய அச்சுறுத்தலாக இருப்பது பல்கிப் பெருகி வரும் குப்பைகளே. தெருவில் அனைவரது கண்களில் தென்படும் குப்பை பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கவர். எளிதாகவும், கையாளுவதற்கு வசதியாகவும் இருப்பதால் இன்றைய தலைமுறையினரது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பிளாஸ்டிக் கேரி பேக் மாறிவிட்டது.
இப்படி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை நாம் முறையாக அப்புறப்படுத்துகிறோமா? இல்லை. மாறாக, பூமிக்கு கேடுவிளைவிக்கும் வகையில் தெருவில் வீசுகிறோம்.
பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.
பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் ஹைட்ரோகார்பன் மற்றும் பியூரான் போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.
குப்பை கழிவுகளுடன் மண்ணில் பிளாஸ்டிக் பைகளை புதைப்பதால், அவை நெடுங்காலத்துக்கு மண்ணில் மக்கிப்போகாமல் தாவரங்களின் வேர்கள் ஊடுருவ முடியாமலும், மழைநீர் மண்ணுக்குள் செல்வதைத் தடுக்கவும் செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய காரணமாக அமைகின்றன.
பிளாஸ்டிக் பைகளில் உள்ள உணவுப் பொருட்களை கால்நடைகள் உட்கொள்ளும்போது, கால்நடைகளின் உணவுக்குழல் அடைபட்டு அவை இறந்து போகின்றன. சில உயிரினங்கள் பேப்பர் என்று நினைத்துக் கொண்டு தவறுதலாக பிளாஸ்டிக் பைகளை உண்டுவிடுகின்றன. யானைகள், மாடுகள் இப்படி இறந்து போகும் நிகழ்வுகள் நிறைய பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கப் பழகுவோம். மற்ற நண்பர்கள், உறவினர்களுக்கும் இச்செய்தியை எடுத்துச் சொல்வோம். அவசரத் தேவைக்கு ஒன்றிரண்டு முறை பிளாஸ்டிக் பையை பயன்படுத்தினால், அந்த பிளாஸ்டிக் பொருட்களை குப்பையோடு குப்பையாகப் போடாமல், சேமித்து மறுசுழற்சிக்கு அனுப்புவோம்.
துணிப்பைகள், சணல்பைகள், பழைய துணிகளால் தைக்கப்பட்ட பைகள், விழாக்களில் கொடுக்கப்படும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம்.


தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஓசூர்

சட்டவியல் கோட்பாடுகள்!

மனித வாழ்வை நெறிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சட்டவியல் துறை சுற்றுச்சூழலை பாதுகாப்பதுக் குறித்தும் தேவையான அளவில் சட்டவியல் கோட்பாடுகளை உருவாக்கி வந்துள்ளது.
சட்டவியல் கோட்பாடுகள் எழுதி ஆவணப்படுத்தாத காலத்திலும், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும், பொறுப்புணர்வும் இருந்ததை பழந்தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்

- என்ற திருக்குறளே பழந்தமிழர்கள், சுற்றுச்சூழல் குறித்து கொண்டிருந்த பரந்த பார்வையை விளக்கும்
சுதந்திரத்திற்கு முன்னரும் சூழல் பாதுகாப்புக்காக சில சட்டங்கள் இருந்தன என்றபோதிலும், சுதந்திரத்திற்கு பிந்தைய சட்டங்களே நாட்டின் இன்றைய நிலையை நிர்ணயிப்பதால், தற்போதைய சட்டங்களை குறித்து பார்ப்போம்.

இந்தியாவில் உள்ள சட்டங்களில் முதன்மையானது, இந்திய அரசியலமைப்புச் சட்டமே! இந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அரசுக்கும் (உறுப்பு 48A) , குடிமக்களுக்குமான (உறுப்பு 51A[g]) சுற்றுச்சூழல் குறித்த கடமைகள் வலியுறுத்தப் பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் குறித்த அரசுக்கான கடமைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியில் “அரசுக்கு வழி காட்டும் நெறிமுறைகள்” என்ற தலைப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, “நாட்டின் சுற்றுச்சூழலை, அரசு பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வேண்டும். மேலும் நாட்டிலுள்ள காடுகளையும், காட்டு விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசு மற்றும் அரசு அமைப்புகள் முயற்சி எடுக்க வேண்டும்”.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சுற்றுச்சூழல் குறித்து மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், நடைமுறையில் சுற்றுச்சூழல் குறித்த அரசு மற்றும் குடிமக்களின் கவனம் தேவையான அளவு இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதைப் புரிந்து கொள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தன்மைகள் குறித்து சுருக்கமாக புரிந்து கொள்வது அவசியம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ள அம்சங்களில் பலவும் செயல்படும் தன்மை வாய்ந்தவை. அந்த அம்சங்கள் செயல்படாது விடப்பட்டால் அது குறித்து வழக்கு தொடரமுடியும். இந்த அம்சங்கள் அடிப்படை உரிமைகள் எனப்படுகின்றன.

ஆனால் அதே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சில பகுதிகள் செயல்படா தன்மையுடையதாகவும் இருக்கின்றன. அதாவது அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காம் பகுதியில் உள்ள அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களை செயல்படுத்துமாறு வலியுறுத்தி நீதிமன்றங்களை நாடமுடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 37ன் படி, அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள கொள்கைகள் அனைத்தும் நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையானவையாகும். சட்டங்களை இயற்றும்போது, இத்தகைய அடிப்படைக் கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால் இந்தப் பகுதியில் விதிக்கப்பட்டவற்றை, எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது.

இவ்வாறு நீதிமன்றங்களின் மூலம் வலியுறுத்த இயலாத பிரிவுகளின் கீழ்தான் மேலே கூறப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

எனினும் அண்மைக்காலத்தில் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் குறித்து ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, இந்திய நீதித்துறையிலும் ஓரளவு முன்னேற்றத்தையும், மேம்பாட்டையும் ஏற்படுத்தி உள்ளது.

உலக அரங்கில் எந்த நாடும் தனித்து செயல்பட இயலாத நிலையில், பன்னாட்டு அளவில் சூழல் குறித்த அம்சங்களில் ஏற்படும் மாற்றங்களை இந்தியாவும் புறக்கணிக்க முடியாது. பன்னாட்டு கடப்பாடுகளை இந்தியா நிறைவேற்றுவதற்கு வசதியாக இந்திய அரசியல் அமைப்பில் இரண்டு உறுப்புகள் உள்ளன. அவை உறுப்பு 51 மற்றும் 253 ஆகியவை. உறுப்பு 51, பன்னாட்டு அமைதியையும், உறவுகளையும் பாதுகாக்கும் நோக்கில் பன்னாட்டு சட்டங்களையும், உடன்படிக்கைகளையும் ஏற்பதை அரசின் கடமையாக வலியுறுத்துகிறது. உறுப்பு 253, பன்னாட்டு உடன்படிக்கைகளையும், சட்டங்களையும் இந்தியாவில் அமல்படுத்துவதற்கு வசதியாக சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை மைய அரசிற்கு வழங்குகிறது.

இந்தச்சூழலில் 1972ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் ஐ.நா.அவையின் சார்பில் நடைபெற்ற மனித சுற்றுச்சூழல் மாநாட்டில் வெளியிடப்பட்ட“மனித சுற்றுச்சூழல் குறித்த ஸ்டாக்ஹோம் பிரகடனம்” சூழல் குறித்த புதிய கவனங்களையும், அக்கறைகளையும் இந்தியாவில் ஏற்படுத்தியது.

நீதிபதிகள்வி. ஆர். கிருஷ்ணய்யர், ஏ. எம். அஹமதி மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்எம். சி. மேத்தா போன்றவர்களின் உழைப்பாலும், ஈடுபாட்டாலும் சுற்றுச்சூழல் குறித்த இந்திய நீதித்துறையின் பார்வை சற்று மாற்றி அமைக்கப் பட்டுள்ளது

இந்திய அரசியல் சட்டத்தின் செயல்படும் பிரிவில் அமைந்துள்ள உறுப்பு 21ல் குறிப்பிடப்பட்டுள்ள, சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக்கூடாது என்ற சட்ட வாசகத்திற்கு மிகவிரிந்த பொருளை நீதிபதிகள் கொடுத்துள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்ற புரிதலில், சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது தனிநபரின் சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக்கூடிய அபாயமாக – ஒரு அடிப்படை உரிமை மீறலாக பொருள் கொள்ளப்பட்டு பல்வேறு முன்மாதிரி தீர்ப்புகள் வழங்கப் பட்டுள்ளன.
இந்த அடிப்படையில் இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 21ன் கீழ் கீழ்க்கண்ட கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
  1. வாழ்வதற்கான உரிமை என்பது மாசுபடாத சுற்றுச்சூழலுக்கான உரிமையாக பொருள் கொள்ளப்படும். இது அனைவருக்கும் பொதுவானது.
  2. அரசுக்கொள்கைகளை செயல்படுத்தும் அதிகாரக்குழுக்கள் சுற்றுச்சூழல் சட்டங்களை கடுமையாக செயல்படுத்தும் பொறுப்பும், கடமையும் கொண்டவை.
  3. சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழுள்ள தமது கடமைகளை செய்யத்தவறுவதற்கு நிதி ஆதாரம் இல்லை என்றோ, தேவையான பணியாளர்கள் இல்லை என்றோ அரசு அமைப்புகள் கூறக்கூடாது.
  4. சுற்றுச்சூழல் சட்டத்தின் ஒரு பகுதியான “மாசுபடுத்துபவரே செலுத்துதல்” (Polluter pays principle) என்ற அடிப்படையில் மாசுக்கேடுக்கு காரணமானவரே அதற்கான இழப்பீட்டை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும்.
  5. “முன்னெச்சரிக்கை குறிக்கோள்”(Precautionary principle) –படி அரசு அதிகார அமைப்பு, சுற்றுச்சூழல் மாசுகேட்டிற்கான காரணங்களை முன்கூட்டியே தவிர்க்க வேண்டும். புதிய மேம்பாட்டு பணிகளும், தொழில் அமைப்புகளும் அவற்றின் செயல்பாடுகளும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாதது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவற்றின் உரிமையாளர்களுக்கே உடையது.
  6. சுற்றுச்சூழல் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகள் (அ) மைய மற்றும் மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் கொள்கை; (ஆ) நின்று நிலைத்து நீடிக்கக்கூடிய வளர்ச்சி மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல்; மற்றும் (இ) முந்தைய தலைமுறையிடம் பெற்ற சுற்றுச்சூழலை எதிர்கால தலைமுறைக்கு வழங்கும் கடமை போன்ற அம்சங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
  7. சுற்றுச்சூழல் சட்டங்களை பொருட்படுத்தாமல், வளர்ச்சி பணிகளை அல்லது தொழில் முயற்சிகளை மேற்கொள்வோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
  8. சுற்றுச்சூழல் சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; சுற்றுச்சூழல் நோக்கங்களை முறியடிக்கும் வகையில் பயன்படுத்தக் கூடாது.
  9. இயற்கை வளங்கள் அனைத்திற்கும், அரசே பொறுப்புரிமையர் (Trustee) ஆகும். கடற்கரை, ஓடும் தண்ணீர், காற்று, காடுகள், மென்மையான நிலங்கள் ஆகிய அனைத்துக்கும் பொதுமக்களே பயனாளிகள். இந்த இயற்கை வளங்களை தனியார் உரிமையாக மாற்றுவதற்கு அரசு அனுமதிக்கக் கூடாது.
மேற்கூறப்பட்ட கொள்கைகள் பல்வேறு வழக்குகளின் தீ்ர்ப்புகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனினும், நடைமுறையில் பல்வேறு பிரசினைகளிலும் இந்த கொள்கைகளுக்கு எதிரான அரசு உத்தரவுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் வருவதை அனைவரும் உணர முடியும்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று அரசு அமைப்புகள் கொள்கை முடிவுகளை மேற்கொண்டாலும் அதை நடைமுறைப்படுத்த தேவையான சட்டங்கள் போதுமான அளவில் இல்லாமையே இந்தப் பிரச்சினைக்கான அடிப்படை காரணமாகும். சூழல் பாதுகாப்பு சட்டங்களில் சட்டமீறல்களை செய்வோருக்கு அளிக்கப்படும் தண்டனை மிகமிக குறைந்த அளவில் இருப்பதால் இந்த சட்டங்களால் சூழல் குற்றங்களை தடுக்க இயலவில்லை என்பதை அனுபவம் உணர்த்துகிறது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு அமைப்பு சீரிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருப்பதும். அந்த சட்டங்களை செயலிழக்க செய்வதில் அரசு மற்றும் தனியார் (தொழில்) துறைகளும் முனைப்புடன் நிற்பதும் இந்த பிரச்சினைக்கான மிகமுக்கியமான காரணமாகும்

nandri: poovulagu.org

காட்டுயிர்களை ஏன் பாதுகாக்க வேண்டும்?

காட்டுயிர்களை ஏன் பாதுகாக்க வேண்டும்? யாரிடமிருந்து பாதுகாக்க வேண்டும்?
வனவிலங்குகள் என்றவுடன் எங்கோ தொலைவில் வாழும் பெரிய விலங்குகள் என்ற சித்திரமே நமது மனதில் தோன்றுகிறது. வனவிலங்கு என்று சாதாரணமாக குறிப்பிடுவது பெரிய பாலு£ட்டிகளை மட்டுமே. ஆனால் வனவிலங்குகள் (காட்டுயிர்கள்) என்பது இன்னும் விரிவான பொருளில் குறிப்பிடப்படுகிறது. ஐந்து பேரினங்களில் உள்ள உயிரினங்களை அடக்கியது. தாவரங்கள், விலங்குகளைத் தவிர, மூன்று பேரினங்கள் உள்ளன என்று நவீன இயற்கையியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். பூஞ்சைகள், நுண்ணுயிர் நீர்த்தாவரங்கள்-புரோடோசோவாகள்,ஒரு செல் பாக்டீரியாகள் என்ற அந்த மூன்றும் காட்டுயிர்கள்தான். அப்படியானால் பறவைகள், மீன்கள், பூச்சிகள், தாவரங்கள் என அனைத்து வகைகளும் காட்டுயிர்களே. அனைத்து உயிரினங்களும் காட்டுயிர்களில் அடக்கம் என்பதால், நமது வீட்டிலுள்ள சிலந்திகள் தொடங்கி பார்க்கும் இடமெல்லாம் அவை வாழ்கின்றன.
அப்படியானால் காட்டுயிர்களுக்கு என்ன நடக்கிறது? அவற்றை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் என்ன?
இதைப் புரிந்து கொள்ள நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும். பூமியில் மனிதர்கள் தோன்றிய காலத்துக்குச் செல்வோம். அங்கிருந்து அவர்களும், அவர்களின் வழித்தோன்றல்களும் என்ன செய்தார்கள் என்பதை பின்தொடருவோம். பூமியில் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிர்கள் தோன்றியதாகத் தெரிகிறது.
மனிதர்கள் பழங்களை சேகரித்து, விலங்குகளை வேட்டையாடி உணவு தேடுபவர்களாக அறிமுகமானார்கள். அவர்கள் காலடி எடுத்து வைத்த உலகம் இயற்கையியலாளர்களின் சொர்க்கமாக, காட்டுயிர்கள் மண்டிக்கிடந்தது என்று புதைபடிம ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது.
மனிதர்களின் அறிவுத் திறன் வளர்ந்தது. அவர்கள் வெற்றிகரமான உயிரினமாக மாறினார்கள். அவர்களது எதிரிகளாக இருந்த காட்டுயிர்களை வேட்டையாட ஆரம்பித்தனர். அவர்களது எண்ணிக்கை கூடியது, பரவினார்கள். அதேநேரம் செயல்பாடுகளின் வரம்பு விரிவடைந்து கொண்டே போனது.
நகரங்கள், பட்டணங்கள், அணைகள், கால்வாய்கள், சாலைகள், வயல்கள் உருவாக்கப்பட்டன. மனிதர்கள் காடுகளை அழித்தனர், ஏரிகளையும், குளங்களையும் நிரப்பினர். பூச்சிகளை விரட்டுவதற்காக பயிர்களில் நச்சை கவிழ்த்தனர். அவர்கள் அதிகம் பயணம் செய்தார்கள். அப்படிச் சென்றவோது வைரஸ்கள் மற்றும் ஆபத்தான பாக்டீரியாகளை சுமந்து சென்றனர். அவற்றை எல்லா இடங்களிலும் பரப்பினார்கள். வாகனங்கள், விண்கலங்கள், தொழிற்சாலைகள், அணுவெடிப்பு சோதனைகள் மூலம் நீர், நிலம், காற்றில் ஆபத்தான வேதிப்பொருள்களைக் கலந்தார்கள். இயற்கை உலகம் சுருங்க ஆரம்பித்தது, பின்வாங்கியது.
சுருங்கச் சொன்னால், காட்டுயிர்கள் மீது மனிதர்கள் ஏற்படுத்திய பாதிப்பு பயங்கரமாக இருந்தது. நமது சமீபகால நினைவலைகளை ஆராய்ந்தால்கூட, காட்டுயிர்கள் அதிகம் இருந்ததை அறிய முடிகிறது. கடந்த தலைமுறை, அதற்கு முந்தைய தலைமுறையினரிடம் கேட்டால் காட்டுயிர்கள் பற்றிய அவர்கள் கூறும் விவரணைகள் நம்பமுடியாததாக இருக்கின்றன.
எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள அதிக கற்பனை தேவையில்லை. தற்போது ஆங்காங்கு ஒட்டிக்கொண்டுள்ள இயற்கை வடிவமைப்புகள் ஒட்டுமொத்தமாக அழிந்து போகும். காட்டுயிர்கள் ஒவ்வொன்றாக அழிவை நோக்கி பயணிக்கத் தொடங்கும். அவற்றில் பல மனிதர்களால் பார்க்கப்படாதவையாகவும், வகை பிரிக்கப்படாதவையாகவும் இருக்கும்.
உலகம் முழுவதும் மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள். நாம் எங்கு சென்றாலும் வயல்கள், சாலைகள், கால்வாய்கள், தொழிற்சாலைகள், அணைகள்... நிரம்பியிருக்கும். இது மிகவும் மோசமான நிலைமை. நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் காட்டுயிர்கள் மறைந்துவிடும். நாம் இந்த பூமியின் குழந்தைகள், ஆனால் ஒரு முக்கிய புள்ளியில், நாம் பூமியின் மேலாளர்கள் ஆகிவிட்டோம்.
நாம் நீண்டகாலமாக செயற்கையான மனித உலகத்துக்குள் வாழ்ந்துவிட்டதுதான், எல்லாமே வேறு திசையில் செல்வதற்குக் காரணம். இப்பொழுது எல்லாமே நம்முடையது என்று நினைத்துக் கொள்கிறோம். நாம் நாகரிகமடைந்தபோது, ஏதோ ஒரு புள்ளியில், இயற்கையிடமிருந்து விலகி நாம் தனித்து வளர்ந்துவிட்டோம். பழசை மறந்துவிட்டோம். தங்களைச் சுற்றியுள்ள காட்டுயிர்கள் பற்றி குழந்தைகள் அறியாமல் இருக்கிறார்கள்.
அதேநேரம், இயற்கையின் படைப்புகளை நாம் இன்னமும் குறிப்பிட்ட அளவு போற்றித்தான் வருகிறோம். விலங்கு காட்சியகம் அல்லது காட்டுயிர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து குழந்தைகள், பெரியவர்கள் பரவசம் அடைகிறோம். காட்டுயிர்கள் தொடர்பாக அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆர்வத்தை அதிகரிக்கும், காட்டுயிர்களை பாதுகாப்புக்கு அதிக ஆதரவு கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.
காட்டுயிர்களை பாதுகாக்க நாம் எதுவும் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்? காட்டுயிர்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, சூழலியல் காரணங்கள் வலியுறுத்துகின்றன.
வாழும் உயிரின வகைகள் மிக அதிக அளவில் உள்ளன, அவை சிக்கலான வகையில் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. அதிக வகைகள் அழிந்தால் என்ன நடக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. அந்த நிலையில் நாமும் இறந்துவிடுவோம். ஏனென்றால் நாம் மட்டும் தனியாக வாழ முடியாது.
காட்டுயிர்களை பாதுகாக்க வேண்டும் என்று முன்மொழியும் மற்றொரு விவாதம், பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஏனென்றால், காடுகளில் உள்ள பல உயிர் காக்கும் மருந்துகள் நமக்குக் கிடைக்காமலே போகக் கூடும். அந்தத் தாவரங்கள் அழியும் நிலையில் உள்ளன. அத்தகைய காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன.
காட்டுயிர்களை காக்க வலியுறுத்தும் மேற்குறிப்பிட்ட காரணங்கள் பெரிதும் மனிதர்களை மையமிட்டவை. நாம் நம் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும், நமது நலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அப்படியில்லாமல், செயற்கை வேதிப்பொருள்கள், பயிர்கள், பண்ணை விலங்குகள் மூலம் நாம் வாழ முடியும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.
அதற்குப் பிறகும் நாம் காட்டுயிர்களை காக்க வேண்டிய தேவை உள்ளது. ஏனென்றால் நாம் வைத்துள்ள மதிப்பீடுகள் அப்படிப்பட்டவை. நாம் வைத்துள்ள மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே எது சரி, எது சரியில்லை என்பதை தீர்மானிக்கிறோம். பூமியில் உயிரினம் தோன்றியதை சுருக்கமாக ஓராண்டு என்று வைத்துக் கொண்டால், நாகரிகமடைந்த மனிதனின் மொத்த வாழ்க்கையும் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே. அப்படிப் பார்த்தால், புதிதாக வந்த ஒருவர், உலகை ஒட்டுமொத்தமாக அழிப்பதும், ஆக்கிரமிப்பதும் மனித மதிப்பீடுகளின்படி சரியல்லவே.
இவற்றைத் தாண்டி இயற்கை, காட்டுயிர்களை நேரில் கண்டு உணர்ந்தவர்கள், ஆர்வம் கொண்டவர்களின் பிணைப்பு வலுவானது, கட்டாயம் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவது.
nandri: poovulagu.org