Thursday, 28 July 2011

சாயப்பட்டறை கழிவு நீர் காவிரி, நொய்யலில் கலக்காமல் தடுக்க வலியுறுத்தல்

சாயப்பட்டறை கழிவு நீர் காவிரி, நொய்யலில் கலக்காமல் தடுக்க வலியுறுத்தல்

First Published : 28 Jul 2011 11:30:32 AM IST


கரூர், ஜூலை 27: ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் சாயக் கழிவு நீர் காவிரி, நொய்யலில் கலக்காமல் தடுக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் வெ. ஷோபனா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், விவசாயிகள் ஏற்கெனவே கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற விவாதம்:  உழவர் ஆய்வு மன்ற அமைப்பாளர் ஏ.வி. கோபாலதேசிகன் : கரூர் மாவட்டத்தில் குளங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.  அரியாறு வடிநிலக் கோட்டம், உதவி செயற்பொறியாளர் : கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்டங்களில் உள்ள 15 பொதுப்பணித் துறை குளங்களில் 6-ல் ஆக்கிரமிப்புகள் இல்லை. 3-ல் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. 3-ல் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். 3-ல் அளவீடு செய்ய வேண்டும்.  ஆட்சியர்: ஆக்கிரமிப்புள்ள குளங்கள் எவை?  உதவி செயற்பொறியாளர் : வடசேரி, வளையல்காரன்புதூர், வீரராக்கியம் குளங்கள்.  "நாம்' அமைப்பின் கரூர் மாவட்டச் செயலர் ஆர். செல்வராஜ், கவுண்டன்பட்டி ஆர். சுப்ரமணியம், கீழவெளியூர் கே.ஆர். ராஜு, வெள்ளப்பட்டி வி.கே. தங்கவேல்:  வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் போதிய ஊழியர்கள் இல்லாததால், பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, உரிய மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். கிணறு வெட்ட வழங்கப்பட்ட கடனுக்கான மானியம் 2 ஆண்டுகளாகியும் வழங்கப்படவில்லை.  கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் மோ. ஹேமா: கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளுக்குள்பட்டு மிகைப் பணியாளர்கள் மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.  கூட்டுறவு வங்கிகளில் வசூலிக்கப்படும் பணத்தை மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நேரில் சென்று வசூலிக்க தமிழகத்திலேயே முதல் முறையாக கரூர் மாவட்டத்தில்தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மானியம் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆர். செல்வராஜ் : குறைந்த மின் அழுத்தத்தால் கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாய மின் மோட்டார்கள் பழுதாகுகின்றன. மேலும், மின் கம்பங்களில் ஏற்படும் பழுதுகளையும் விவசாயிகளே சரி செய்ய வேண்டும் என்ற அளவில், மின் வாரியத்தில் ஆள் பற்றாக்குறை உள்ளது.  ஆட்சியர் : மின் கம்பங்களில் விவசாயிகள் ஏறிப் பழுது பார்க்கக் கூடாது. எதுவாக இருந்தாலும் மின் வாரியத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.  முன்னூர் வி. பூபதி: கார்வழி கிராமத்திலுள்ள ஆத்துப்பாளையம் அணை, கால்வாய், மதகுகள் ஆகியவற்றிலுள்ள ஷட்டர்கள் பராமரிப்பின்றி உள்ளன. அணை கட்டியதிலிருந்து திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் தேங்கி, அதனால் மண்டிய கழிவுகளுடன் இருப்பதால் அதைத் தூர் வார வேண்டும்.  விவசாயிகள் : தற்போது திருப்பூர் மாவட்டத்தில் சாயப் பட்டறைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், அங்கு தற்போது போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சாயப் பட்டறைகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கினாலும், அவற்றின் கழிவு நீர் கரூர் மாவட்டத்தில் காவிரி, நொய்யலில் வராமல் தடுக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் : நீதிமன்ற உத்தரவின்படி, தற்போது திருப்பூரில் சாயப் பட்டறைகள் மூடப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவின்படியே இதில் நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆட்சியர் : கரூர் மாவட்ட சாயப் பட்டறைக் கழிவுகளும் நீர் நிலைகளில் கலப்பதாகவும் புகார் வருகிறது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கவுண்டன்பட்டி ஆர். சுப்பிரமணியம் : கரூர் மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைக்கு யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. ஆகிய உரங்கள் தேவை. ஆனால், பொட்டாஷ் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது. மாவட்டத்தில் கையிருப்பில் எவ்வளவு உரம் உள்ளது?  வேளாண் அலுவலர் மதனகோபால்: கரூர் மாவட்டத்திற்கு இம்மாத பொட்டாஷ் ஒதுக்கீடு 1,100 டன். ஆனால், 47 டன் மட்டுமே வந்துள்ளது. கடந்த மாதக் கையிருப்பு 600 டன் உள்ளது. டி.ஏ.பி., யூரியா உள்ளிட்ட உரங்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன.  வேளாண் இணை இயக்குநர் கி. ஜெகதீசன் : உரத் தட்டுப்பாட்டைப் போக்க சீனாவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே, விரைவில் போதுமான உரங்கள் வந்து சேருமென எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் உர மூட்டைகளில் குறிக்கப்பட்டுள்ள விலையை மட்டுமே வழங்க வேண்டும்.  கவண்டன்பட்டி ஆர். சுப்பிரமணியம் : பட்டா மாறுதல், கணினிப் பட்டா பெறுதல் போன்றவற்றில் அதிகளவில் குளறுபடி உள்ளது.  மாவட்ட வருவாய் அலுவலர் தி. பிச்சையா: இதுகுறித்து புதிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதை அந்தந்தக் கிராம நிர்வாக அலுவலர்கள் அளவில் சரிசெய்து கொள்ளலாம்.  தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு கேள்விகளுக்கு, அரசு அலுவலர்கள் பதிலளித்தனர்.  

nandri- dinmani

No comments:

Post a Comment