பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும்
First Published : 17 Aug 2011 08:11:43 PM IST
Last Updated :
திருச்சி, ஆக. 16: வாகனப் பெருக்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை தமிழ்நாட்டில் மேம்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனு விவரம்: "புவி வெப்பம் அதிகரிப்பிற்கு ஒரு காரணம் நாள்தோறும் பெருகி வரும் வாகனங்கள். பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாத சூழலில் நடுத்தர, ஏழை மக்களும்கூட, கடன் வாங்கியாவது கார், இரு சக்கர வாகனம் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். தேவைக்கும் குறைவான பேருந்துகள், வசதியில்லாத - பராமரிப்பில்லாத பேருந்துகள், நேரத்துக்கு வராத பேருந்துகள், சாலையோரங்களில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெறும் சுரண்டல்கள் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. இதனால், ஏற்படும் வாகனப் பெருக்கத்தால் கூடுதல் எரிபொருள் செலவாகி, புகை வெளியேறுதல் அதிகரித்து சுற்றுச்சூழல் மாசடைகிறது. இவற்றின் காரணமாக பருவநிலை மாறுதல், ஓசோன் படலத்தில் பாதிப்பு போன்ற பிரச்னைகளும் உருவாகின்றன. எனவே, மக்களின் தேவைக்குத் தக்கவாறு கூடுதல் பேருந்துகளை வாங்க வேண்டும். அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். காலாவதியான பேருந்துகளை இயக்கக் கூடாது. குறைபாடுகளை உடனுக்குடன் சரிபார்க்க வேண்டும். சென்னையைப் போல மெட்ரோ ரயில் அல்லது தங்களின் விருப்பப்படியான மோனோ ரயில் திட்டத்தை வாய்ப்புள்ள மற்ற பெருநகரங்களுக்கும் விரிவுபடுத்தினால் அந்தந்தப் பகுதியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம். தமிழ்நாட்டு எல்லைக்குள் கூடுதலான ரயில் போக்குவரத்துக்கும், இரு வழித்தடங்களை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவதற்குமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் செய்தால் மக்களுக்கு பொதுப் போக்குவரத்தில் நாட்டம் பிறக்கும். நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் கார் மற்றும் இரு சக்கர வாகனம் வாங்கும் எண்ணிக்கை குறையும். சுற்றுச்சூழல் பாதிப்பும் வெகுவாகக் குறையும். எனவே, இதுதொடர்பாக எதிர்வரும் செப். 16 உலக ஓசோன் தினத்தன்று தங்களின் அறிவிப்புகள், திட்டங்களை வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment