"மின்னணு கழிவுகள்தான் மிகவும் அபாயகரமானவை'
First Published : 25 Aug 2011 02:27:14 PM IST
Last Updated :
திருச்சி, ஆக. 24: மின்னணு கழிவுகள்தான் தற்போதைய சூழலில் மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படுகின்றன என்றார் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆர். ராமச்சந்திரன். திருச்சியில் "என்விரான் சொல்யூஷன்ஸ்' நடத்திய கனரக உலோகக் கழிவுகள் மற்றும் முறையற்ற கழிவு மேலாண்மையால் ஏற்படும் சூழல் கேடுகள் குறித்த கருத்தரங்கைத் தொடங்கிவைத்து அவர் மேலும் பேசியது: "தற்போதைய சூழலில், செல்போன், கணினி, தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்டவற்றின் "மின்னணு கழிவுகள்' மிகுந்த அபாயகரமான கழிவுகளாக அறியப்படுகின்றன. இப்போதைக்கு இவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அவற்றைப் பிரித்து பயன்படுத்த முடியாதவற்றை அழிக்கும் முறையைப் பரிசோதனை முறையில் மேற்கொண்டு வருகிறோம். மருத்துவமனைகளில் பாதரசப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளுக்கும் பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் 2785 தொழில்சாலைகள் அபாயகரமான கழிவுகளை வெளியேற்றுகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளன' என்றார் ராமச்சந்திரன். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவ நிபுணர் டாக்டர் வித்யா ஹரி ஐயர் பேசியது: "பல் மருத்துவத்தில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பாதரசத் துளிகளை முறையாக- பாதுகாப்பாக அகற்றத் தேவையான வசதியை பல் மருத்துவமனைகளில் செய்ய வேண்டுமானால் சில லட்சங்கள் செலவாகும். தற்போது பலரும் இந்த முறையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பல் மருத்துவத்தின் போது வெளியாகும் கழிவுகளை சிவப்பு, மஞ்சள் நிறப் பைகளில் தனித்தனியாகச் சேகரிக்கிறோம். யார் பொறுப்பு? என்ற கேள்விக்கு யாரும் யாரையும் குறை சொல்லி- அல்லது கையைக் காட்டித் தப்பித்துக் கொள்ளாமல், ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர வேண்டும். தொடர் ஓட்டத்தின் போது கையிலிருக்கும் குச்சியை அடுத்தவரிடம்தானே கொடுக்கப் போகிறோம் என்று இருந்துவிட முடியுமா? அதைப் போலத்தான் சுற்றுச்சூழல் கேடும்' என்றார் வித்யா. கோவை "ஓசை' அறக்கட்டளையின் இயக்குநர் கே. காளிதாசன் பேசியது: "வெளிநாட்டு விலங்குகளைத் தெரிந்து வைத்திருக்கிறோம், ஆனால், நம்நாட்டுப் பறவைகளை, விலங்குகளைத் தெரியவில்லை. உலகில் 3 லட்சம் முதல் 3 கோடி வரை உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மனிதன். விலங்கினங்களும், பறவையினங்களும் காப்பாற்ற வேண்டும் என்று கோருவது, அவற்றின் மீதான கரிசனத்தினால் அல்ல. அவை அழிவதால் இந்த இயற்கைச் சூழல் கெடுகிறது. பாதிப்பு மனிதனை வந்தடைகிறது' என்றார் காளிதாசன். "விஎன்எஸ் என்விரோ பயோடெக்' நிறுவன இயக்குநர் என். ஜெகநாதன் பேசியது: "இந்தியாவில் நாள்தோறும் உருவாகும் கழிவுகளில் 51 சதம் மட்டுமே சுத்திகரிக்கப்படுகின்றன அல்லது முறையாக அப்புறப்படுத்தப்படுகிறது. நாளொன்றுக்கு 160 லட்சம் டன் குப்பைக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. ரூ. 7.5 லட்சத்தில் குப்பைக் கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் ஒன்றைத் தயாரித்து விற்பனைக்கு அளித்திருக்கிறோம். இந்த ஓர் இயந்திரத்தின் மூலம் 7 டன் குப்பைகளை உரமாக்கலாம். 10 ஆண்டுகள் ஆயுள் கொண்ட இந்த இயந்திரத்தால் ஒரு மாதத்துக்கு குப்பைகளை உரமாக்க சராசரியாக ரூ. 7 ஆயிரம் மட்டுமே செலவாகும்' என்றார் ஜெகநாதன். "என்விரான் சொல்யூஷன்ஸ்' அமைப்பின் இயக்குநர் ஜி. அருண் செந்தில் ராம் பேசியது: "மனிதன் என்ற உயிரினத்துக்கு மட்டும்தான் தலைக்கனம் உள்ளது. நாம் மட்டும்தான் இந்த உலகில் வாழ வேண்டும் என்று நினைக்கிறோம். செல்போன், கணினிகள் போன்றவற்றால் இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 4.80 லட்சம் டன் கழிவுகள் வெளியாகின்றன. இதற்காக இவற்றின் பயன்பாட்டைக் குறைப்பது, பலருக்கும் பயன்படுத்தக் கொடுப்பது, மறுசுழற்சி முறையில் அவற்றின் கழிவுகளை அகற்றுவது என மூன்று முறைகளைக் கையாளலாம்' என்றார் அருண் செந்தில் ராம். கருத்தரங்கை எம்ஏஎம் பொறியியல் கல்லூரி முதல்வர் எம்.ஏ. மாலுக் முகமது ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு தொடர் கல்வி வாரியத் தலைவர் கே. கோவிந்தராஜ் வாழ்த்திப் பேசினார்.
nandri- dinamani daily
No comments:
Post a Comment