காடுகளில் எதையும் விட்டுவரவும், எடுத்துவரவும் வேண்டாம்! First Published : 25 Aug 2011 02:27:29 PM IST
Last Updated :
திருச்சி, ஆக. 24: காடுகளுக்குச் சென்றால் நாம் எடுத்துச் செல்லும் எதையும் அங்கே விட்டு வரவும் வேண்டாம், அங்கிருந்து எதையும் எடுத்து வரவும் வேண்டாம் என சுற்றுலாப் பிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் கோவையைச் சேர்ந்த சூழலியலாளர் கே. காளிதாசன். திருச்சி தூய வளனார் கல்லூரி "செப்பர்டு' விரிவாக்கத் துறை மற்றும் மாவட்ட வனத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற "சர்வதேச காடுகள் ஆண்டு 2011' கொண்டாட்டத்தில் அவர் மேலும் பேசியது: "மூலிகைச் செடிகள் என்பதை அறிந்து கொள்ள பல ஆண்டு வரலாறு தேவைப்படுகிறது. இப்போது தேவையில்லை என்று பிடுங்கி எறியப்படும் செடிகள் ஒரு காலத்தில் எய்ட்ஸ் நோய்க்கும் மருந்தாகலாம். துளசியை மருந்தென்றும், அரிசியை உணவென்றும், அரளியை விஷமென்றும் தெரிந்து கொள்ள மனிதகுலத்துக்கு பல ஆண்டுகள் ஆனதைக் கவனிக்க வேண்டும். எனவே, இயற்கையைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றிலிருந்து நிறைய புரிந்து கொள்ள வேண்டும். ஆறு எப்படி உருவாகிறது என்ற கேள்வி எந்தப் பாடப் புத்தகத்திலும் இல்லை. மனிதர்களால் காயப்படுத்தப்படாத மலை உச்சிகளில் இருந்து உருவாகும் ஓடைகள் ஒன்றாகச் சேர்ந்துதான் ஆறுகள் உருவாகின்றன. மலை உச்சியிலுள்ள புல்வெளிகளில் இயற்கையாகவே அமைந்த மெத்தைகளைப் போன்ற பரப்பில் பெய்யும் மழை, அங்கேயே சேமிக்கப்படுகிறது. இதுபோன்ற மெத்தைகள் ஒரு சென்டிமீட்டர் உயரத்துக்கு உருவாக ஓராண்டு ஆகும் என்கிறார்கள். இவை "சோலைக் காடுகள்' என்றழைக்கப்படுகின்றன. இந்தப் பகுதியிலுள்ள புல்வெளிகள் இந்தத் தண்ணீரில், 5 சதத்தை மட்டுமே எடுத்துக் கொள்கின்றன. மற்றவை அப்படியே அந்த மலை இடுக்குகளில் சிறு சிறு ஊற்றுகளாகி, ஓடைகளாகி, தரையில் எல்லாம் கலந்து ஆறுகளாகின்றன. வடிகால் என்றால் எப்போதாவது ஓடுபவை, ஆறுகள் என்றால் எப்போதும் ஓடுபவை. ஆனால், இப்போது நாட்டில் ஆறுகள்தான் எப்போதாவது ஓடுபவையாகிவிட்டன. தென்னிந்தியாவைக் காக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஏராளமான சுற்றுலாத் தலங்களை உருவாக்கி விட்டோம். மலைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருள்களை, பிளாஸ்டிக் கழிவுகளை, பாட்டில்களை அந்த மலைகளில் வீசியெறிந்துவிட்டு வருகிறோம். பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் பறவைகள், விலங்கினங்கள் அழிகின்றன. அவை அழிந்தாலும் மரங்கள் அழியும். எனவே, காடுகள் என்பவை விலங்கினங்கள், பறவையினங்கள் வாழும் வீடு. அவற்றுக்குள் மனிதர்கள் அத்துமீறித்தான் நுழைகிறோம். அந்தக் காடுகளைக் காக்க, அங்கே சென்று மரம் நட வேண்டாம், விதைகளைத் தூவ வேண்டாம், உரம் போட வேண்டாம். எதுவும் செய்யாமல் இருந்தால் போதும்! காடுகளுக்குள் சென்று திரும்பும்போது, நாம் எடுத்துச் சென்ற எதையும் விட்டுவிட்டு வரக் கூடாது; அங்கிருந்து எதையும் எடுத்து வரவும் கூடாது. இதுபோதும். அந்தக் காட்டின் நினைவுகளையும், புகைப்படங்களையும் மட்டும் நம்முடன் எடுத்துவரலாம். அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற மிச்சமிருக்கும் காடுகளையாவது காப்பாற்றுவோம். இயற்கையை நேசிக்க வேண்டும். நேசிப்பது என்பது வேறு, ரசிப்பது என்பது வேறு. புவிவெப்பமயமாதல் இதே நிலையில் தொடர்ந்தால், அடுத்த 50 ஆண்டுகளில் கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும். 10 நிமிஷங்கள் சுனாமி வந்தபோதே இந்தப் புவியில் உயிரிழந்தவர்கள் ஒரு லட்சம் பேர். எனவே, மேலும் மேலும் "கார்பன்' உருவாவதைத் தடுப்போம், உருவாகும் "கார்பனை' எடுத்துக்கொள்ளும் மரங்களை வளர்ப்போம்' என்றார் காளிதாசன். நிகழ்ச்சியில் மாவட்ட உதவி வன அலுவலர் பி. சொர்ணப்பன் பேசும்போது, உடலில் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நுரையீரல் எப்படி முக்கியமோ அப்படித்தான் மரங்களும் எனக் குறிப்பிட்டார். நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலர் அருள்தந்தை ஏ. ஆல்பர்ட் முத்துமாலை தலைமை வகித்தார். துணை முதல்வர் அருள்தந்தை பி. ஜான் போஸ்கோ வாழ்த்திப் பேசினார். விரிவாக்கத் துறை இயக்குநர் அருள்தந்தை எஸ். அருள்தாஸ் வரவேற்றார். மாணவி எஸ். செலின்பிரபா நன்றி கூறினார். இதில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதுதொடர்பான ஒளிப்படக் காட்சிகளும் காட்டப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை செப்பர்டு விரிவாக்கத் துறை ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
nandri- dinamani daily
No comments:
Post a Comment